சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு.. நாகர்கோவில் மாணவன் கணேஷ்குமார் தமிழகத்தில் முதலிடம்
சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ்குமார் என்ற மாணவர், தமிழக அளவில் முதலிடம் பிடித்தார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வாணையத்தின் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வு நடத்தி அதில் தேர்வாகும் நபர்கள் அந்தந்த பதவியில் அமரவைக்கப்படுகிறார்கள்.
முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்காணல் ஆகிய 3 கட்டங்களை கொண்டது இந்த தேர்வு. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு, அதாவது பிரிலிமினரி தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றோர் பிரதான தேர்வை எழுதினர்.
அதில் தேர்வு செய்யப்பட்டோரை நேர்காணலுக்கு அழைப்பதற்கு முன்னர் கொரோனா பரவல் காரணமாக இந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் நேர்முகத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இறுதித் தேர்வில் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்தது. இதில் 180 பேர் ஐஏஎஸ் பணியிடங்களையும் 150 பேர் வெளியுறவுத் துறை பணியிடங்களையும் 24 பேர் ஐபிஎஸ் பணியிடங்களையும் தேர்வு செய்தனர்.
2019 யூபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு... முடிவுகள் இணையத்தில் வெளியீடு!!
தமிழகத்தில் இருந்து 44-க்கும் மேற்பட்டோர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அதில் நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ்குமார் தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். பார்வைக் குறைபாடு உடைய இருவர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதுரைச் சேர்ந்த பூர்ண சுந்தரி மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பால நாகேந்திரன் ஆகிய இருவரும் தேர்ச்சி அடைந்தார்கள்.