Exclusive: பஞ்சாயத்து ராஜ் சட்டத்தால்... எளியோர் கைகளிலும் அதிகாரம் கிடைக்கச்செய்தவர் ராஜீவ் -நக்மா
சென்னை: பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அறிமுகம் செய்து எளியோர் கைகளுக்கும் அதிகாரம் கிடைக்கச் செய்தவர் ராஜீவ் காந்தி என மகிளா காங்கிரஸ் தேசியச் செயலாளர் நக்மா தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி மறைந்து 29- ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவர் ஏற்படுத்திய சீர்த்திருத்தங்களும், வளர்ச்சிப் பணிகளும் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும் எனக் கூறினார்.
ராஜீவ்காந்தியின் 29-வது ஆண்டு நினைவு நாளான இன்று அவரை பற்றிய தனது கருத்துக்களை ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக பகிர்ந்துள்ளா நக்மா.
அதன் விவரம் பின்வருமாறு;
ராஜீவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால்... இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றியிருப்பார் -தங்கபாலு
எளியோருக்கு அதிகாரம்
''ராஜீவ் காந்தி அறிமுகம் செய்த பஞ்சாயத்து ராஜ் சட்டத்தால் இன்று எளியோர்கள் கைகளிலும் அதிகாரம் கிடைக்கிறது. உள்ளாட்சி நிர்வாக முறையை அவர் அறிமுகம் செய்தது அவரது சாதனைகளில் மிக முக்கியமானது. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை மட்டும் அவர் அறிமுகம் செய்யவில்லை என்றால் பெண்களும், ஒடுக்கப்பட்டோரும் நிர்வாக பதவிகளுக்கு வந்திருக்க முடியாது. இந்த சட்டத்தை அறிமுகம் செய்த அவர் அது நடைமுறைக்கு வரும் போது உயிருடன் இல்லை.
முழுமையாக அறிவேன்
ராஜீவ்காந்தியின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல நாட்டிற்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தினார். இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாகவும், வல்லரசு நாடாகவும் கொண்டு வருவதற்கு அவர் பணியாற்றினார். அப்போது நான் அரசியலில் இல்லை என்றாலும் ராஜீவ் ஜீயின் செயல்பாடுகளை பற்றி பின்னர் முழுமையாக அறிந்துகொண்டேன்.
30 ஆண்டுகளுக்கு முன்பு
ஏழ்மையை ஒழிப்பதற்காக ராஜீவ்காந்தி பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார். அவர் மட்டும் மறையவில்லை என்றால் இன்று இந்தியாவில் ஏழ்மை நிலை என்று ஒன்று இருந்திருக்காது. சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்கள் மீதும் அவர் கவனம் செலுத்தி அவர்களுக்காக திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். குறுகிய மனப்பான்மை இல்லாமல் 30 ஆண்டுகளுக்கே முன்பே முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டவர் ராஜீவ்.
ராஜீவ் கனவுகள்
இன்று தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது என்றால் அதற்கான கட்டமைப்பும், அடித்தளமும் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது ஏற்படுத்தப்பட்டது. ராஜீவ்காந்தி விட்டுச்சென்ற பணிகளை; அவர் கனவுகளை ராகுல்காந்தி நிறைவேற்றிக் காட்டுவார்.''
இவ்வாறு ராஜீவ்காந்தி பற்றிய அவரது பெருமைகளை மகிளா காங்கிரஸ் தேசியச் செயலாளர் நக்மா கூறியுள்ளார்.