காங்கிரசுக்கு அன்று அண்ணா! திமுகவுக்கு இன்று அண்ணாமலை! ஆட்சி மாற்றம் உறுதி! நயினார் பேச்சு!
சென்னை: தமிழகத்தில் அன்று அண்ணா ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது போல், இன்று அண்ணாமலை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார் என பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறார்.
Recommended Video
சென்னையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் எப்போது ஆட்சி மாற்றம் நிகழும் என மக்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் என்றும் ஒரு வருடத்திற்குள் திமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கெட்டப்பெயர் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது.. அண்ணாமலை கருத்தால் பரபரப்பு!
பாஜக பொதுக்கூட்டம்
மேலும், அந்த பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலை வருகிறார் பேசுகிறார் என்று தெரிந்தால் அந்தப் பொதுக்கூட்டத்துக்கு மக்கள் சாரை சாரையாக வருகிறார்கள் என்றார் நயினார். இதனை உண்மையிலேயே அண்ணாமலையை புகழ்ந்து நயினார் பேசினாரா இல்லை, அவரை மேடையில் வைத்துக்கொண்டே வஞ்சிப் புகழ்ச்சி அணி பாடினாரா எனத் தெரியவில்லை.
லட்சியம் 25
இன்னும் 2 ஆண்டுகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பது தான் பாஜகவின் ஒரே லட்சியம் என்றும் ஆனால் 15 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் எனவும் நயினார் நம்பிக்கை பொங்க பேசினார். நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து வந்தாலும் வரலாம் என்றும் அப்படி வந்தால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை என்றும் புதிய தகவலை வெளியிட்டார் நயினார் நாகேந்திரன்.
அண்ணா -அண்ணாமலை
இதேபோல் தமிழகத்தில் அன்று அண்ணா ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது போல், இன்று அண்ணாமலை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார் எனக் கூறினார் நயினார் நாகேந்திரன். அண்ணாவையும், அண்ணாமலையையும் அவர் ஒப்பிட்டு பேசியிருப்பது தமிழக அரசியலில் நிச்சயம் விவாதத்தை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பாஜக பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மேடை ஏறியதால் உடனடியாக பேச்சை முடித்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்துவிட்டார் நயினார்.
மழை பெய்தது
பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சில நிமிடங்கள் லேசான மழை பெய்துவிட்டு நின்றதால், அதனை நல்ல சகுனமாக கருதுவதாக கூறினார் நயினார் நாகேந்திரன்.