ஜெயலட்சுமி, ஸ்வாதி, நிர்மலா தேவி.. இப்போது திருநாவுக்கரசு.. தொடரும் நக்கீரன் வேட்டை!
நக்கீரன் கோபால் இதுவரை நிறைய விவகாரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்.
சென்னை: நாய்கள், வெறி பிடித்த நாய்கள், ஓநாய்கள்.. நக்கீரன் கோபாலின் கண்களில், வார்த்தைகளில் தெறிக்கும் அந்த கோபம் ஒரு தகப்பனின் பரிதவிப்பை வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் பெண்களைப் பெற்ற ஒவ்வொரு தகப்பனும் இப்படித்தான் துடித்துக் கொண்டிருக்கிறான் பொள்ளாச்சி கொடூர வீடியோக்களைப் பார்த்துப் பார்த்து!
நக்கீரன் இதழில் கோபால் கையாண்ட ஒவ்வொரு வழக்கும் தமிழகத்தையே அசைத்து பார்க்க கூடிய முக்கியத்துவம் வாய்ந்தவை.
ஒவ்வொரு பிரச்சனையிலும், ஒவ்வொரு விவகாரங்களிலும், ஒவ்வொரு வழக்குகளிலும் மேலோட்டமாக எழுதிவிட்டு போகாமல் உள்ளே இறங்கி தூர் வாரி மாநிலம் முழுவதும் இறைத்தவர்தான் கோபால்!
பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்.. சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.. அதிரடி திருப்பம் வருமா?
நிர்மலாதேவி
ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் இப்படிப்பட்ட வழக்குகளை தேர்ந்தெடுத்து எழுதுவதற்கும் ஒரு தில் வேண்டும். அது கோபாலுக்கு நிறையவே இருந்தது. இப்போதும் இருக்கிறது. சமீபத்தில் நிர்மலாதேவி விவகாரம்வரை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது கோபால்தான். இப்போதும் பொள்ளாச்சி விவகாரத்தின் நிஜ முகத்தை கிழித்துகொண்டிருப்பதும் கோபால்தான்.
தனி தைரியம்
புலனாய்வு இதழ்களில் தனி முத்திரை பதித்தவர் கோபால். பயமே கிடையாது. தைரியமாக எதையும் வெளியிடுவார். வெளியிடுவதற்கு முன்பு ஆயிரம் முறை அதை பரிசோதித்துக் கொள்வார். இறங்கி விட்டால் எமனே வந்தாலும் பயப்பட மாட்டார். அவர் எடுத்த முதல் ரிஸ்க் வீரப்பன். யாருமே நெருங்க முடியாத அந்த காட்டு ராஜாவை , கொடூர முகம் படைத்த வீரப்பனை தைரியமாக சந்தித்து இவன்தான் வீரப்பன் என்று மக்களிடம் காட்டியவர் கோபால்தான்.
அட்டகாசங்கள்
வீரப்பனுக்கு முன்பு வரை நக்கீரன் ஒரு சாதாரண பத்திரிகை. ஆனால் வீரப்பன் விவகாரத்திற்குப் பிறகு புலனாய்வு இதழாக அது தனி முத்திரை பதித்தது. வீரப்பன் விவகாரத்தில் அவர் மீது பல புகார்கள் வந்தன. ஆனால் எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. வீரப்பனுக்குப் பின்னால் மறைந்திருந்த அவலங்கள், அரசு இயந்திரங்களின் அட்டகாசங்கள், அத்துமீறல்கள், காவல்துறையின் அத்துமீறல்கள் அடாவடிகளை அம்பலப்படுத்தினார் கோபால்.
மறுபக்கம்
அதேபோலத்தான் ஆட்டோ சங்கர். ஆட்டோ சங்கரை ஒரு காமக் கொடூரனாக, கொலையாளியாக எல்லோரும் பார்த்து கொண்டிருந்தபோது அவனையே நேரில் பார்த்து தொடர் போட்டது நக்கீரன்தான். அவனது மறுபக்கத்தையும் வெளிக்காட்டினார் கோபால். ஆட்டோ சங்கரின் தொடர் நக்கீரனை தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் பாப்புலராக்கியது.
துணிச்சல்
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நக்கீரன் சந்தித்த சவால்கள் மிக மிகப் பெரியது. வேறு யாராக இருந்தாலும் தெறித்து ஓடியிருப்பார்கள் (தராசு போல). ஆனால் கோபால் எதிர்த்து நின்றார். துணிச்சலுடன் தொடர்ந்து செய்திகளைப் போட்டார். அக்கு வேறாக பிரித்து மேய்ந்த கட்டுரைகளால் ஜெயலலிதா எந்த அளவுக்கு கோபத்தின் உச்சத்திற்குப் போனார் என்பது வரலாறு. நக்கீரன் சந்தித்த சவால்களையும் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது. ஆனாலும் விடவில்லையே கோபால்.
ஜெயலட்சுமி
அடுத்து டிராக் மாறி மணல் கொள்ளையர்கள், கள்ளச்சாராய அட்டகாசம் என சமூகத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து புறப்பட்டது நக்கீரன். எல்லா இடத்திலும் சமூகத்தில் புறையோடிப் போயிருக்கும் அத்துமீறல்களை அம்பலப்படுத்தியது நக்கீரன். அதேபோல சங்கரராமன் விவகாரத்திலும் நக்கீரனின் பங்கு மிகப் பெரியது. மிகப் பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியது. அதேபோலத்தான் போலீஸ் வேடம் போட்டு ஏமாற்றி பலே மோசடித்தனத்தில் ஈடுபட்ட சிவகாசி ஜெயலட்சுமி விவகார். நடிகைகள் புவனேஸ்வரி, கன்னட பிரசாத் கும்பலின் விபச்சார வேட்டை என நக்கீரனின் கோபப் பார்வை போன இடங்கள் மிகப் பெரிய லிஸ்ட்.
சட்ட போராட்டம்
லேட்டஸ்டாக நக்கீரன் அம்பலப்படுத்திய விவகாரம் நிர்மலாதேவி. உண்மையில் என்ன நடந்தது என்பதை புட்டுப் புட்டு வைத்தார் கோபால். இதற்காக வழக்கு பாய்ந்தது, கைது செய்யப்பட்டார். ஆனால் கோர்ட்டே ஆடிப் போகும் அளவுக்கு அவருக்காக வந்து குவிந்தது ஆதரவு. கோர்ட்டில் நடந்த சட்டப் போராட்டத்திற்குப் பிறகு வழக்கை ரத்து செய்து கோபாலை விடுவித்தது கோர்ட். இன்று பொள்ளாச்சி கொடூரத்தை அம்பலப்படுத்தியுள்ளது நக்கீரன்.
காமிரா சனியன்
"நிர்மலாதேவி விஷயத்தை இதோடு ஒப்பிட்டு பார்த்தால், இது ஆயிரம் மடங்கு பெரிசு... இப்படித்தான் ராம்குமார் அப்பாவி செத்தான்... மனோஜ், சயானும் உண்மையை சொல்லிடகூடாதுன்னு வாய்ப்பூட்டு போட்டு உள்ளே கொண்டு போயிட்டாங்க. இதுமாதிரிதான் இந்த திருநாவுக்கரசு விஷயத்துலயும் நடக்கும். 1500 வீடியோவும் பாதுகாக்கணும். இது வெளியில போயிடக்கூடாது, இதை வச்சி காசாக்கிடக்கூடாது, இந்த காமிரா சனியன் வந்ததிலிருந்தே நாடு நாசமா போச்சு.. திருநாவுக்கரசை பேச விடணும். இவங்களை ஈசியா விட்டுடாதீங்க.. அதிக பட்ச தண்டனையை உடனடியாக தரணும்" என்கிறார் கோபால் ஆவேசமாக.
சமூக அக்கறையுடன் கூடிய நக்கீரன் கோபாலின் தொடர் வேட்டை அக்கிரமங்களை தொடர்ந்து சுட்டுப் பொசுக்கட்டும்.