51 நாட்கள் பரோல் முடிந்தது.. மகளின் திருமண ஏற்பாட்டிற்காக வந்த நளினிக்கு மீண்டும் சிறை!
சென்னை: மகளின் திருமண ஏற்பாட்டிற்காக 51 நாட்கள் பரோலில் வந்த நளினி மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி , முருகன் உட்பட 7 தமிழர்கள் சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்று கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக பரோல் வழங்க கோரி வழக்கு நளினி கடந்த சில மாதங்கள் முன் வழக்கு தொடுத்தார்.சென்னை ஹைகோர்ட்டில் இந்த வழக்கு நடந்தது.
இந்த வழக்கில் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி ஜூலை 5ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின் திருமண ஏற்பாடுகளுக்காக ஜூலை 25 முதல் பரோலில் வந்த அவருக்கு, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவரின் பரோல் இன்றோடு முடிந்தது. இந்த நிலையில் மேலும் ஒரு மாதம் பரோல் வழங்க அவர் கோரிக்கை வைத்தார். அதன்படி அக்டோபர் 15 வரை பரோல் நீட்டிப்பு வழங்க கோரி நளினி மனுத்தாக்கல் செய்தார். அதில் தன்னுடைய உறவினர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள்.
தன் மாமியார் இலங்கையில் இருக்கிறார். அவருடைய விசாவில் பிரச்சனை. அவர் தமிழகம் வந்தால்தான் அவருடன் மகளின் திருமணம் குறித்து பேச முடியும். அதனால் பரோலை நீட்டிக்க வேண்டும். இந்த மாதம் கடைசி வாரம்தான் என் மாமியார் தமிழகம் வருகிறார் என்று நளினி மனுவில் குறிப்பிட்டார்.
ஆனால் இவரின் பரோலை நீட்டிக்க முடியாது என்று தமிழக அரசு சென்னை ஹைகோர்ட்டில் கூறிவிட்டது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை கூறி பரோல் நீட்டிப்பு வழங்க கூறுகின்றனர் என்று தமிழக அரசு இதில் பதில் அளித்தது. இதனால் சென்னை ஹைகோர்ட்டும் நளினிக்கு பரோல் வழங்க மறுத்துவிட்டது.
அதேபோல் நளினியின் கணவர் முருகனும் தனது மகள் திருமணத்திற்காக ஒரு மாத பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் அளித்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் நளினி மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.