"எப்பவுமே என் ரஞ்சிதம் ஞாபகமாவே இருக்கு".. நெகிழும் நல்லகண்ணு.. நாலு வருஷமாச்சு மறைந்து!
நல்லகண்ணு மனைவி ரஞ்சிதம் அம்மாள் நினைவு நாள் இன்று
சென்னை: "வீட்டுக்கு போனா என் ரஞ்சிதம் இல்லையே.. மனசு அவளையே நினைச்சுட்டேதான் இருக்கு. அந்த வேதனையைச் சுமந்துட்டேதான் திரியுறேன்" என்று தன் மனைவியை நினைத்து கண்கலங்கி சொல்வார் மூத்த தலைவர் நல்லகண்ணு!
அரசியல்வாதிகளிலேயே தன் எளிமையால் அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்படுபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மட்டுமே என்பதை கொஞ்சம் உரக்கவே சொல்லலாம்.
எதிரிகளையே இதுவரை சம்பாதிக்காத ஒரே அரசியல் கட்சி தலைவர்தான் இந்த "நவீன கக்கன் நல்லகண்ணு"! இன்று இவரது மனைவி ரஞ்சிதம் அம்மாளின் நினைவு நாள்!
அன்னியோன்யம்
மாதம் ரூ.36/-ல் குடும்பம் நடத்திய மாதரசிதான் ரஞ்சிதம் நல்லகண்ணு.. தாய்க்கு தாயாய், வாழ்க்கைத் துணையாய், அறிதலும் புரிதலுமாக, நல்லகண்ணுவுடன் அன்னியோன்யமாக வாழ்க்கையில் பயணித்தவர்.. குறைந்த இரத்தம் அழுத்தம் காரணமாக இதே நாள் கடந்த 2016-ல் உயிரிழந்தார்.
கிறிஸ்தவ குடும்பம்
கடுமையான சிறைவாசத்துக்கு பிறகு, 1956ல் விடுதலையான நல்லகண்ணுவுக்கு யாருமே பெண் தர முன்வரவில்லை.. அப்போதுதான், 1958ல் தனது 31வது வயதில் அவரது உறவு பெண்ணான ரஞ்சிதம் அம்மாளை கல்யாணம் செய்தார்.. இவர் கிருஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர்.. 2 பேருமே நன்றாக படித்தவர்கள்.. இருந்தபோதிலும் இவர்கள் போதகரை வைத்து மணமுடிக்கவில்லை. தோழர். என்.டி. வானமாமலை தலைமையில், தோழர். பாலதண்டாயுதம் முன்னிலையில் இவர்கள் மாலை மாற்றிக் கொண்டனர்.
செலவு
ரஞ்சிதம் அம்மாள் ஒரு நல்லாசிரியர்.. அன்பு, அமைதி, கருணை வடிவம் கொண்டவர்.. 1958ல் அவருடைய மாத வருமானம் ரூ.36/- மட்டும்தான். இதில் ரூ.30/- குடும்ப செலவு போக, மீதம் 6 ரூபாயை நல்லகண்ணுவின் தினசரி செலவிற்காக ஒதுக்கி விடுவாராம்.. நல்லகண்ணுவோ சென்னையில் தங்கி முழுநேர கட்சிப்பணி செய்து வந்தார். .. முன்பெல்லாம் நல்லகண்ணு தன் மனைவிக்கு பெரும்பாலும் போஸ்ட் கார்டில் கடிதம் எழுதியேதான் வாழ்க்கை நகர்ந்தது.. ரஞ்சிதம் அம்மாளின் டீச்சர் பணி ஓய்வுக்குப் பின்புதான் சென்னைக்கு குடிவந்தார். நிறைய புத்தகம் படிப்பார்.. அதுகுறித்த ஆரோக்கியமான விவாதங்களை முன்வைத்து பேசுவார்!
தூய வாழ்க்கை
ஆனால் மனைவியின் பிரிவுக்குப் பிறகு மிகவும் தளர்ந்தும் சோர்ந்தும் விட்டார் நல்லகண்ணு.. இந்த ஆதர்ச தம்பதியரின் வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி கிடையாது... அந்த அளவுக்கு தூய வாழ்க்கை இவர்களுடையது.. பொருளாதாரத்தைச் சேர்ப்பதில் நாட்டமில்லாமல், பொதுநலனுடனே வாழ்பவருடன் 58 வருடங்கள் இணைந்து குடும்ப வாழ்க்கையை நடத்தியிருக்கிறார் ரஞ்சிதம் அம்மாள்.
மீன் குழம்பு
"என்னை, முழுசா புரிஞ்சிக்கிட்டவ என் ரஞ்சிதம்.. அவ ரசம் நல்லா வைப்பாள்.. மீன் குழம்பும் நல்லா செய்வாள்.. இப்பவும் என்னை சுத்தி நிறைய பேர் இருந்தாலும், எனக்குனு யாரும் இல்லைங்கிறதை என் மனசு உணரவெச்சிட்டே இருக்கு.. நான் எப்போ வெளியே போனாலும், செலவுக்கு அவகிட்டதான் காசு வாங்கிட்டு போவேன். என்னைக்குமே வீட்டில எதுவுமே இல்லையேன்னு ஒருநாளும் புலம்பினது இல்லை.. என் பிறந்தநாளுக்கு அவதான் துணிமணி எடுத்துக் கொடுப்பா.நான் வீட்டில இருந்தாலே அவளுக்கு அதுதான் பிறந்த நாள் பரிசு.. கண்ணை மூடி கண்ணை திறந்தால் அவ ஞாபகம்தான் அதிகமாக வருது" என்று கண்கலங்கி சொல்கிறார் நல்லகண்ணு.