பார்ரா.. எப்போதாவது வெற்றி பெறுபவர்களிடம் இறுமாப்பு வழியும் உண்மைதான் போல.. நமது அம்மா
சென்னை: எப்போதாவது வெற்றி பெறுபவர்களிடம் இறுமாப்பு வழியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் மீது நமது அம்மா விமர்சனம் முன்வைத்துள்ளது.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை குறித்து நேற்றைய தினம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது அவர் தேர்தல் நடத்தாமலேயே ஆட்சி மாற்றம் ஏற்படும் என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து நமது அம்மா நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: தேர்தல் நடத்தாமலேயே ஆட்சி மாற்றம் நடத்துவாராம் திருவாளர் துண்டுச்சீட்டு. பார்டா... எப்போதாவது வெற்றி பெறுபவர்களிடம் இறுமாப்பு வழியும். எப்போதாவது தோல்வி அடைபவரிடம் விழிப்புணர்வு பெருகும் என்பார்கள்.
விரும்பி சூட்டியது
அதுபோல, இன்றைய கோபத்தில் நேற்றைய கொடுமைகளை மறந்து விடும் தமிழ் மக்கள், உணர்ச்சி வயத்தால் தந்த விபத்து வெற்றியை தி.மு.க. தலைவர் ஏதோ தனக்கு தமிழக மக்கள் விரும்பி சூட்டிய மகுடம் என்று கருதிக் கொண்டு அளவு கடந்த மமதையை கொப்பளிக்கிறார்.
ஆட்சி மாற்றம்
அதனால் தான் 123 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு கம்பீர பெரும்பான்மையோடு வெற்றி நடைபோடும் எங்கள் அரசை ஜனநாயகத்தின் மாண்புகளுக்கு மாறாக கவிழ்ப்பேன் என்றும், தேர்தல் இல்லாமலேயே புறவழியில் ஆட்சி மாற்றம் நடத்துவோம் என்றும் கூறுகிறார்கள்.
அடகு
ஏழை, எளியோர் அடகு வைத்த ஐந்து பவுன் நகை வரை மீட்டுக் கொடுப்போம். கல்விக் கடனை ரத்து செய்வோம், விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம், கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கும் கடன்களை எல்லாம் திரும்ப செலுத்த வேண்டாம் என்று உத்தரவிடுவோம். இப்படியாக வறியோரின் வாக்குகளை வாக்குறுதி என்ற பெயரால் ஏமாற்றி அறுவடை செய்த தி.மு.க. இப்போது ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துவோம் என்று சொல்லி, தாங்கள் கொள்ளையடித்து வைத்திருக்கும், கருப்புப் பணத்தை வைத்துக் கொண்டு நா சவடால் அடிக்கிறது.
மூக்கறுபட்ட கட்சி
ஏற்கனவே அம்மாவின் மரணத்திற்கு பிறகு, தினகரனோடு திரைமறைவு பேரம் நடத்தி, இந்த அரசை கவிழ்ப்பதற்கு எத்தனையோ பிரயத்தனங்களை மேற்கொண்டு மூக்கறுபட்ட மு.க. கட்சி இப்போதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான போக்கோடு மக்கள் அமைத்த அரசை தேர்தல் ஜனநாயகத்திற்கு மாறாக மாற்றிக் காட்டுவோம் என்று கொக்கரிக்கிறது. அப்படியெனில், இத்தகைய திமிர்தனத்தை ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி, சுக்கு நூறாக்காதோ... கழகத்தின் ஒன்றரை கோடி சிப்பாய் படை என தெரிவித்துள்ளது.