கமலோடு கூட்டு.. வெந்த நெல்லை முளைக்க வைக்கும் கோமாளித்தனம்.. ரஜினிக்கு காலம் உணர்த்தும்.. நமது அம்மா
சென்னை: ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து செயல்பட போவதாக தெரிவித்திருப்பது பூனையும் எலியும் குடித்தனம் நடத்துவது போன்றதாகும் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில் கட்டுரை தீட்டப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் திரைத்துறையில் 40 ஆண்டுகளாக நட்பாக இருந்து வரும் நிலையில் அதில் ஒருவர் அரசியல் கட்சியை தொடங்கிவிட்டார். மற்றொருவர் இன்னும் கட்சியை தொடங்கவில்லை. ஆனால் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.
பெரும்பாலான திரைத்துறையினரின் எண்ணம் ரஜினியும் கமலும் அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என்பதாகும். இதை கமல் 60 நிகழ்ச்சியில் எஸ் ஏ சந்திரசேகர் வெளிப்படையாக தெரிவித்தார்.
கமலும் ரஜினியும் கை கோர்த்தால்.. நடுவில் புகுந்து இறங்கி அடிப்பாரா சீமான்.. என்ன நடக்கும்?
இணைய மாட்டார்கள்
இதுகுறித்து கமல்ஹாசன், ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் தனித்தனியே கேட்ட போது மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால், அவசியமேற்பட்டால் இருவரும் நிச்சயம் இணைவோம் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரின் சித்தாந்தங்கள் வேறு, கொள்கை வேறு கோட்பாடு வேறு, இருவரும் இணைந்தாலும் ரசிகர்கள் இணைய மாட்டார்கள் என்பது போன்ற பேச்சுகள் எழுகின்றன.
நமது அம்மா
அது போல் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்ற கேள்விகளும் எழுகின்றன. இந்த நிலையில் பதினாறு வயதும் பதராகும் பொழுதும் என்ற தலைப்பில் நமது அம்மா நாளிதழில் கட்டுரை தீட்டியுள்ளது.
வலியச் சென்று பலிகடா
அதில் சினிமாவில் ரஜினியோடு போட்டி போட்டு தோற்றுவிட்ட கமல்ஹாசன், அவரை அரசியலில் தன்னோடு இணைத்து ரஜினியின் செல்வாக்கை மறைத்துவிட தந்திரமாக நரிக் கணக்கு போடுகிறார். இது புரியாமல் ரஜினியும் வலியச் சென்று பலிகடா ஆவேன் என்பது பரிதாபம்.
குடித்தனம்
ஆன்மிக அரசியல் தொடங்கி 234 தொகுதிகளில் தனியாக போட்டியிடுவதாக அறிவித்த ரஜினி, ஆன்மிகத்துக்கு எதிராக உள்ள கமலோடு கரம் கோர்ப்பது எப்படி இருக்கிறது தெரியுமா? எலியும் பூனையும் இணைந்து குடித்தனம் நடத்தப் போகிறேன் என்பதற்கு சமம் ஆகும்.
நேரம் பார்க்கிறார்
கமலோடு கூட்டு வைத்துக் கொண்டு அரசியலில் ஜெயிப்பேன் என்பது வெந்த நெல்லை முளைக்க வைக்க முயலும் கோமாளித்தனம் என்பதை ரஜினிக்கு காலம் கற்பிக்க போகிறது. ரஜினியின் கதாநாயகன் பீடத்தை தகர்த்தெறிய கமல் நேரம் பார்த்து காத்திருக்கிறார்.
மாறாத தழும்பாகும்
அதை ரஜினியே வழங்குகிறார் என்றால் சும்மாவா விடுவார் இந்த உத்தமவில்லன். கருணாநிதியின் சீடனான கமல்ஹாசனிடம் ரஜினி பெற போகும் பாடம் ஆறாத காயமாகும். மாறாத தழும்பாகும் என அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.