ஆமைகள்.. கூறுகெட்ட குக்கர்கள்.. மண்ணுளி பாம்புகள்.. விஷம்.. சசி, தினகரனை விமர்சித்த நமது அம்மா
சென்னை: சசிகலாவால் அதிமுகவுக்குள் நுழையவே முடியாது என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா தெரிவித்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா நன்னடத்தை விதிகளின்படி முன்கூட்டியே விடுதலையாகும் வாய்ப்பு இருக்கிறது என பேச்சுகள் எழுந்துள்ளன. அவரது விடுதலை குறித்து தினகரன் தரப்பு முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சிக்கிம் முதல்வர் பிரேம்சிங்கின் தகுதி நீக்க காலத்தை 6 ஆண்டுகளில் இருந்து 13 மாதங்களாக தேர்தல் ஆணையம் குறைத்திருக்கிறது. இந்த சம்பவம் சசிகலாவை வெளியே வருவதற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் சாதகமாகவே உள்ளதாகவே கருதப்படுகிறது.
நமது அம்மா
அவர் வந்தால் தினகரனை ஓரங்கட்டிவிட்டு அமமுகவை அதிமுகவுடன் இணைத்து தலைமை பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது. ஆனால் இந்த யூகங்களை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா மறுத்துள்ளது.
சாத்தான்கள் நோட்டம்
சத்தியத்து கோட்டையும் சாத்தான்கள் நோட்டமும் என்ற தலைப்பில் கவிதையை நமது அம்மா தீட்டியுள்ளது. அதில் தினகரனையும் சசிகலாவையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
விமர்சித்து கவிதை
அதில்
உள்ளே இருப்பவர் வெளியே வருவாராம்
ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கத்தை உடனேயே தனதாக்கி கொள்வாராம்
ஆமைகள் புகுந்திட அதிமுக ஊமைகள் கூடம் ஆகுமாம்
மக்கள் திலகமும் மகராசி அம்மாவும்
வளர்த்த கழகம் மாஃபியா உலகம் ஆகுமாம்
கூடவே.. தன் தவறு உணர்ந்து தாய்வீடு திரும்புவோரை
தடுத்து நிறுத்த பெய்டு நியூஸ் பரப்பி விட்டு பித்தலாட்டம் செய்கிறது
அட கூறுகெட்ட குக்கர்களே அப்பழுக்கில்லா அம்மாவின் அரசியல் புனிதத்தில்
விஷமாகி கலந்து அதிமுக எனும் மாசற்ற இயக்கத்தை கைவைத்தும்
மண்ணுளி பாம்புகளாய் மறைந்திருந்து கொண்டு
கழகத்தை கரையானாய் அரித்து கறை படிய வைத்ததும்
தாய் தந்த பதவியை எல்லாம் தாங்கள் தந்தது என
பின்னிருந்து கொண்டு பில் போட்டு பிழைத்ததும்
முடிசூடிய உடனேயே முதலிலிட்ட கையெழுத்து மது ஒழிப்பு என்றிருக்க
அந்த மகராசி இல்லத்தில் இருந்து கொண்டே
கோல்டன் மிடாஸ் எனும் குடிகெடுக்கும் சாராய ஆலையை நடத்தி
கும்மாளம் போட்டதும் என்று கவிதை உள்ளது.
தினகரன்
சசிகலாவையும் தினகரனையும் ஆமைகள் என விமர்சித்துள்ளது. மேலும் அவர்களுக்கு சொந்தமாக மதுபான ஆலை இயங்கி வருவதையும் சுட்டி காட்டியுள்ளனர். இதில் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற தினகரன் குறித்து கூறுகெட்ட குக்கர்களே என விமர்சனம் செய்துள்ளனர்.