குருமூர்த்தி Vs 'நமது அம்மா'.. பந்திக்கு வெளியே காத்திருக்கும் அதிமுக.. தூக்கில் தொங்கும் துக்ளக்!
Recommended Video
சென்னை: அதிமுகவை தரக்குறைவாக விமர்சனம் செய்து கார்ட்டூன் வெளியிட்ட 'துக்ளக்' வார இதழ் ஆசிரியர் குருமூர்த்திக்கு, அக்கட்சி நாளிதழான 'நமது அம்மா' இன்று பதிலடி கொடுத்துள்ளது.
மத்திய அமைச்சரவை பொறுப்பேற்றபோது, அதிமுகவை சேர்ந்த ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்ற பேச்சு இருந்தது. ஆனால், அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, துக்ளக் இதழில் வெளியிட்ட ஒரு கார்ட்டூன் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஓபிஎஸ், ரவீந்திரநாத் உள்ளிட்டோர், பந்தி நடக்கும் இடத்துக்கு வெளியே நின்றபடி, மீந்ததைத்தான் அவர்கள் நமக்கு போடுவார்கள் என சொல்லி சமாதானம் அடைவது போல ஒரு கார்ட்டூனை துக்ளக் வெளியிட்டிருந்தது.
அதிமுகவினரை கேவலமாக சித்தரிக்கும் துக்ளக் கார்ட்டூன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
குருமூர்த்தியின் தொடர் விமர்சனங்கள்
மிஞ்சிப்போன உணவை, சாப்பிடுவது யார் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. இப்படியாக அதிமுகவை படு கேவலமாக துக்ளக் சித்தரித்தது. ஏற்கனவே துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, அதிமுக தலைவர்களை ஆண்மையில்லாதவர்கள் என ட்விட்டரில் தெரிவித்தவர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரனிடம் அதிமுக வேட்பாளர் தோற்றபோது இவ்வாறு ஒரு கருத்தை அவர் கூறியிருந்தார். இப்போது மீண்டும், அதிமுகவை மிக கேவலமாக அவர் சித்தரித்துள்ளார். இதற்கு, நமது அம்மா நாளிதழ், இன்று பதிலடி கட்டுரை வெளியிட்டுள்ளது.
நேர்மைக்கு களங்கம்
குத்தீட்டி என்ற புனைப்பெயரில் எழுதப்படும் கட்டுரை பிரிவில் இந்த கட்டுரை இடம் பெற்றுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: பாஜக அமைச்சர்கள் மட்டும் உள்ளே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும், கழகம் வெளியே நின்று சாப்பிடுவதற்கு ஏங்குவதாகவும், ஒரு கார்ட்டூனை வரைந்திருக்கிறது துக்ளக். பொது வாழ்க்கை என்பது சேவையாற்றுவது, ஆனால் அதற்கு பதிலாக சாப்பிடுவதே அரசியல் என்பது போல துக்ளக் தீட்டி இருக்கும் கார்ட்டூன், பாஜக அமைச்சர்களைத்தான் மலிவாக சித்தரித்து, அவர்களின் நேர்மையை களங்கப்படுத்தி இருக்கிறது.
மண்டியிட்டதில்லை
கூடவே, அதிகாரத்துக்கு ஏங்குவது போல அண்ணா திமுகவை அப்பத்திரிகை விமர்சித்திருக்கிறது. கழகம் தொடங்கப்பட்டு 42 வருடங்களில் ஏறத்தாழ 30 வருடங்களுக்கு மேலாக அதிகாரத்தில் அமர்ந்து, ஆட்சியில் அமர்ந்து கொண்டே வெற்றி பெற்று, ஆட்சியைத் தொடர்ந்த, அரசியல் புரட்சியை, தமிழகத்தில் 32 வருடங்களுக்குப் பிறகு நடத்தி காட்டியிருக்கும் அதிமுக, ஒருபோதும் மத்திய அரசின் அதிகாரங்களுக்கு மல்லுக்கும் நின்றதில்லை, மண்டியிட்டு கிடந்ததும் இல்லை என்பதே வரலாறு.
குரூரத்தோடு குருமூர்த்தி
ஆனால், இதையெல்லாம் அறியாதவர்கள் போல, கழகத்தின் அமைச்சர்களை இம்போர்ட்டண்ட் என்றும், பந்திக்கு அலைகிறவர்கள் என்றும், ஒரு குரூரத்தோடு ஆடிட்டர் குருமூர்த்தி ஆசிரியராகப் பொறுப்பேற்ற பின்பு துக்ளக் பத்திரிக்கை தொடர்ந்து, கழகத்தையும், கழகத்தின் அமைச்சர்களையும், தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறது.
கடந்து போய்விடுவோம்
'சோ' நடத்திய பாரம்பரியமிக்க பத்திரிக்கை, இப்போது நாளெல்லாம் பெட்டிக்கடைகளில் வாசிப்பதற்கு ஆளில்லாது, தூக்கில் தொங்குகிற துர்நாற்ற பத்திரிக்கையாக மாறி விட்டது என்பதைத் தான் காட்டுகிறது. ஆனால், இதுபோன்ற நாலாந்தர விமர்சனங்களுக்கு கழகத்து சிப்பாய்கள் செவிமடுக்காமல், கடந்து போவது ஒன்றே அவர்களுக்கு நாம் தரும் பதிலாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருமூர்த்திக்கு, அதிமுக கடும் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்து போய்விடுவோம் என அதிமுக நாளிதழ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.