கலையுலக பிள்ளை கமல் குறித்து ... "அம்மா" இப்படிப் பேசலாமா??
சென்னை: நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் மிகக் கடுமையான வார்த்தைகளுடன் கூடிய கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்குவதற்கு முன்னரே தமிழக அரசின் திட்டங்களை விமர்சனம் செய்தவர் கமல்ஹாசன். இன்று வரை தமிழக அரசின் தவறுகளை தைரியமாக சுட்டிக் காட்டி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தனது பதிலடிகளை அளித்து வருகிறார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலத்தை கணித்தவர்கள் எல்லாம் இனி மரத்தடி ஜோசியர்களாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று சேலத்தில் மக்களை சந்தித்த போது கமல் பேசியிருந்தார். இதையடுத்து கமல் மீது பாய்ந்துள்ளது அதிமுகவின் நமது அம்மா நாளிதழ் தலையங்கம்.
உளறல் நாயகன்
அதில் தமிழகத்தை தலைநிமிரச் செய்தது ஆளுமையும் அறிவாற்றலும் தானே. அப்படிப்பட்ட கன்னித்தமிழ் பூமிக்கு காலம் தந்த கொடையை எனக்காக ஏதுமில்லை எல்லாமும் என் மக்களுக்கே என்னும் தவத்தால் வாழ்ந்து தமிழுலகிற்கு ஏராள வளர்ச்சியை மலர்ச்சியையும் வழி வகுத்துத் தந்த விடையை கமல்ஹாசன் என்கிற காகிதப்பூ ஏதோ தன்னை மெத்த அறிவாளி என்று கருதிக் கொண்டு அலைகிற மேற்படி அட்டைக் கத்தி கஜானாவை காலி செய்தார் என்று கருத்து சொல்லியிருப்பது உளறல் நாயகனின் கூமுட்டைத்தனத்தை தான் காட்டுகிறது.
விஸ்வரூபம்
ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான் என்று கலைப்புலி தாணுவை கடனில் தள்ளி கண்ணீர் கசிய வைத்தது. மன்மத அம்பு என்று படம் எடுத்து மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த ஜெமினி பிலிம்ஸ்... கலைஞன், வெற்றி விழா என இவரை வைத்து படம் எடுத்து நொடிப்பு நிலைக்கு ஆளான நடிகர் திலகத்தின் சிவாஜி பிலிம்ஸ்... அது போலவே 80 களிலேயே முதலாளி என எல்லோராலும் அழைக்கப்பட்ட எஸ்.ஏ. ராஜ்கண்ணுவை மகாநதிக்குள் தள்ளி மூழ்கடித்த மகா கேவலம் விஸ்வரூபம்-2 மற்றும் தசாவதாரத்தால் ஆஸ்கார் ரவியை அழித்து முடித்தது.
தங்கத்தாரகை
குணா படத் தயாரிப்பாளரை குணாவாகவே மாற்றியது. எடுக்காத படமாம் மருதநாயகத்தை வைத்து எலிசபெத் ராணியையே ஏமாற்றியது என்றெல்லாம் ஏராளமான தயாரிப்பாளர்களின் கஜானாவை காலி செய்த பேர்வழி தன்னைப் போலவே, பிறரை கருதிக் கொண்டு எங்கள் தங்கத்தாரகையை விமர்சிப்பது மையம் நடத்துபவரின் மனநோயைத்தான் காட்டுகிறது என்று அந்த நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்க முடியாது
கமல்ஹாசன் குறித்து நமது அம்மா நாளிதழ் இப்படி தீயாய் வார்த்தைகளை வாரிக் கொட்டி விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் ரீதியான கமல்ஹாசனின் கருத்துகளுக்கு உரிய பதில் சொல்ல முடியாமல் அவரது சினிமா வாழ்க்கையை இழுப்பதை ஏற்க முடியாது என மய்யம் கட்சியினரும் கூறுகின்றனர்.