வீசுகிறது சசிகலா அலை.. ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம்.. சசிகலா தலைமையில் ஆட்சி.. நமது எம்ஜிஆர்!
சென்னை: வெற்றிக்கு வெகு தூரமில்லை எனும் தலைப்பில் ஒவ்வொரு தொகுதியிலும் சசிகலா பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடிப்பார் என நமது எம்ஜிஆர் நாளிதழில் கட்டுரை தீட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து நமது எம்ஜிஆர் நாளிதழில் வெளியான கட்டுரையில் ஏழை எளிய மக்களின் வாழ்வொளி, தமிழக மக்களின் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் உண்மையான அரசியல் வாரிசு தியாகத் தலைவி சின்னம்மா என்பதை தவிர் வேறு யார்?
எனக்கு பின்னாலும் கழகமும் கழக ஆட்சியும் இன்னும் நூற்றாண்டுகள் தொடரும் என சட்டப்பேரவையில் தீர்க்கதரிசி அம்மா பிரகடனப்படுத்தியதை இன்றைக்கு முன்னெடுத்து, தாயின் லட்சியத்தை நிறைவேற்றிடும் வல்லமைமிக்க ஆற்றல் மிக்க தலைவியாக ஒன்றரை கோடி தொண்டர்கள் எதிர்பார்ப்பது சின்னம்மா அவர்களைத்தான். அவரால் மட்டுமே முடியும். பொய்யர்கள் கூட்டமோ மார்தட்டுவார்கள், ஆனால் பொசுங்கி விடுவார்கள்.
தீயசக்தி
சின்னம்மாவின் அரசியல் பிரவேசத்தை கண்டு தீயசக்தி கூட்டம் மட்டுமல்ல. எதிர்பார்ப்போடு உள்ள கட்சிகளுக்குக் கூட இன்றைக்கு குலை நடுங்கத்தான் செய்துள்ளது. ஏன் என்றால் அம்மாவின் கனவை நனவாக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு மக்களிடையே சென்றால் அனைத்து கட்சிகளையும் சூன்யமாக்கி, கழகத்தை இமயமாய் உயர்த்துவார் என்பதை அறியாவதர்கள் யார், அதுதான் அவர்களுக்கு அச்சம் பயம், பதற்றம் படபடப்பு.
மதியூகி
ஜெயலலிதாவுக்கு சோதனை ஏற்பட்ட காலங்களில் மதியூகியாக இருந்து ஆலோசனைகளை தந்தவர் சின்னம்மா என்பதை நாடறியும். அம்மாவின் அதே நெஞ்சுறுதியோடு அதே பாதையில் இருந்து சிறிதும் விலகாமல் கொள்கைகளை முனஅநெடுத்து தமிழ்ச் சமுதாயத்தை காத்திட, தாய்க்குலத்தின் கண்ணீரை துடைத்திட ஏழை எளிய மக்களை காத்திட அம்மா விட்டு சென்ற பணிகளை செய்து முடிப்பவர் தியாகத்தலைவி ஒருவர்தான் என்பதை மக்கள் அறிந்து கொண்டு இப்போது வாழ்த்தி வரவேற்கிறார்கள்.. ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
தீயசக்தி
சசிகலாவுக்கு தொண்டர்கள் மட்டுமல்ல. தமிழக மக்கள் அனைவரும் அரணாக நிற்பதால், அவரது எழுச்சியை நசுக்குவதற்கு நச்சு கும்பல் ஒன்று சசிவலைகளை பின்னியிருக்கிறதாம். அதனை கண்டு ஒருபோதும் அஞ்சவும் மாட்டார். பயந்து விலகவும் மாட்டார். துணிவின் சிகரம் சசிகலா. தீயசக்தி கூட்டத்துக்கு சதிகாரர்கள் கூட்டத்துக்கு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலே கடைசி தேர்தல் என்பதை செயலாக்கி காட்டுவதோடு அத்தகைய கூட்டத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்வார்.
சசி தலைமையில் ஆட்சி
சசிகலா தலைமையில் ஆட்சி அமைந்தே தீரும். அதற்கான களத்தை சரியான வியூகத்துடன் அமைத்து உறுதியுடன் பணியாற்றி வெற்றியை நிலை நாட்டுவார். சசிகலா அமைதியாகிவிட்டார்... இவ்வளவுதானா என்று ஆருடம் கணிக்கிறார்கள். அமைதி எழுச்சிக்கு அச்சாரம், இன்றைக்கு நாடெங்கும் சசிகலாவின் அரசியல் நிலைப்பாடு குறித்தே விவாதமாகவும், பேச்சாகவும் உள்ளது. தமிழகத்தில் சசிகலாவின் அலை வீசத் தொடங்கிவிட்டதை காணமுடிகிறது. தமிழக மக்களின் எண்ணங்களை, தேவைகளை நன்றாக அறிந்து அதனை செய்து தரக்கூடிய ஒரே தலைவர் இன்றைக்கு இவர்தான் என்ற உறுதி மக்களிடையே திடமாக ஏற்பட்டுள்ளது. சசிகலாவின் அரசியல் பயணத்தில் எவ்வித தடையும் இல்லை. குழப்பமும் இல்லை.
உழைக்க வாருங்கள்
கடுமையாக உழைத்து கழக வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெறச் செய்வார். இன்னும் 36 நாட்களே இடையில் உள்ளது. இதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்காளர்களின் ஆதரவைப் பெற்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெறப்போவைத எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு எத்தனை இடங்கள் வெற்றி என்பது மட்டும் முக்கியமல்ல. எத்தனை சதவிகித வாக்குகள் சசிகலா பெற்றுத் தந்தார்கள். கழக ஆட்சியை அமைத்து காட்டினார்கள் என்பதை எல்லாம் மக்கள் பேசும் காலம் ஊடகங்கள் விவாதிக்கும் காலம் வெகு தூரமில்லை. சசிகலாவோடு தோளோடு தோள் நிற்க, அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் ஒன்றுபட்டு உழைக்க வாருங்கள்' என நமது எம்ஜிஆரில் கட்டுரை வெளியாகியுள்ளது.