ஐந்து வயது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய போலீசார்.. குவியும் பாராட்டு
சென்னை: ஐந்து வயது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு சென்னை நந்தம்பாக்கம் போலீசார் உதவியிருப்பது தெரியவந்துள்ளது. போலீசாரின் மனித நேய செயலை பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் சென்னையில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் பணியாற்றி வருகிறார்.
கார்த்திக்கின் இரண்டாவது மகள் கவிஷ்கா(5). இவருக்கு அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குழந்தையை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மருத்துவர்கள் தகவல்
அங்கு குழந்தை கவிஷ்காவுக்கு உடனே அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். அதற்கு ரூ.5 லட்சம் வேண்டும் என்று கூறினர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கார்த்திக்கின் பொருளாதார நிலை மோசமாகி இருந்தது. இந்த சூழலில் மகளை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் கலங்கி நின்றார்.
உதவிய ஏட்டு செந்தில்குமார்
இந்நிலையில் கார்த்திக்கின் வீட்டின் அருகே சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றும்செந்தில் குமார் வசித்து வருகிறார். குழந்தை கவிஷ்கா அடிக்கடி போலீஸ் ஏட்டு செந்தில்குமாரின் வீட்டுக்கு சென்று வந்தால், அந்த குடும்பத்தில ஒருவராக மாறியிருந்தாள். கவிஷ்கா மீது செந்தில்குமார் அளவற்ற பாசம் வைத்திருந்தார்.
நிதி திரட்டப்பட்டது
குழந்தையின் நிலையை அறிந்த ஏட்டு செந்தில்குமார் தன்னால் முடிந்த 30 ஆயிரம் ரூபாயை கொடுத்து அறுவை சிகிச்சைக்கு செல்லுமாறு கார்த்தியிடம் அறிவுறுத்தினார்.அத்துடன் நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜிடம் குழந்தை கவிஷ்காவின் நிலையை பற்றி கூறினார். உடனே நந்தம்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த அனைத்து காவலர்களும் தங்களால் இயன்ற 45 ஆயிரம் பணத்தை திரட்டி கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தனக்கு தெரிந்த தன்னார்வ அமைப்பாளர்களிடம் இருந்து நிதி திரட்டி கொடுத்தார்.
குழந்தை நலமுடன் திரும்பினார்
நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் ஏட்டு செந்தில்குமார் உள்பட அந்த காவல் நிலையத்தின் அனைத்து போலீசாரின் உதவியால் சிறுமி கவிஷ்காவுக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. சிகிச்சை முடிந்து சிறுமி நலமுடன் வீடு திரும்பினார். போலீசாரின் இந்த மனித நேய செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.