நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் சஸ்பெண்ட் உத்தரவுக்கு காங்கிரஸ் மேலிடம் தடை உத்தரவு
சென்னை: நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் சஸ்பெண்ட் உத்தரவுக்கு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தடை விதித்துள்ளார். மேலும் தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமியின் சஸ்பெண்ட் உத்தரவு செல்லாது என்றும் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமாக சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15 ஆம் தேதி காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்ட ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது.
அப்போது நெல்லை மாவட்டத் தலைவரை மாற்ற வேண்டும் என ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மோதலாக வெடித்தது. இதில் நெல்லை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளான ராபர்ட், ஜோஸ்வா, டேனியல் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
MLA-வை காணவில்லை.. கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம்.. பரபரப்பை ஏற்படுத்திய சுவர் விளம்பரம்..!
ரூபி மனோகரன் மீது குற்றச்சாட்டு
ரூபி மனோகரன் இந்த மோதல் சம்பவத்திற்கு ரூபி மனோகரன்தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அவரை கட்சியிலிருந்தே நீக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் மோதல் சம்பவம் குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. இன்று விசாரணை அது போல் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதாக எஸ்சி துறை தலைவர் ரஞ்சன்குமாருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருவரும் 24 ஆம் தேதி அதாவது இன்றைய தினம் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விசாரணை இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் 10.30 மணிக்கு நடைபெற்றது.
கால அவகாசம் கேட்ட ரூபி மனோகரன்
அப்போது நேரில் ஆஜராவதிலிருந்து ரூபி மனோகரன் கால அவகாசம் கேட்டு அதற்கான கடிதத்தை ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமிக்கு அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் நான் நேரில் வந்து விளக்கம் தர 2 வாரம் கழித்து மாற்று தேதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் ரஞசன் குமார் ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்தது.
அடுத்தது என்ன?
அதன்படி ரஞ்சன் குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துவிட்டார். அவரது விளக்கம் ஒழுங்கு நடவடிக்கை குழுவினரால் ஏற்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து எம்எல்ஏ கே.ஆர். ராமசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: சத்தியமூர்த்தி பவன் மோதல் தொடர்பாக நாங்குநேரி எம்எல்ஏவாக உள்ள ரூபி மனோகரன் மீது 63 மாவட்டத் தலைவர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் அவர் அளித்த விளக்கம் ஏற்புடையதாக அல்ல. அதனால் அவரை காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குகிறோம். அடுத்து நடைபெறும் தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் ஆஜராகி உரிய ஆதாரங்களை ரூபி மனோகரன் சமர்ப்பிக்க வேண்டும் என ராமசாமி தெரிவித்தார்.
ரூபி மனோகரன் நீக்கம் நிறுத்தி வைப்பு
சட்டமன்ற உறுப்பினர், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக உள்ள தன்னை தமிழக காங்கிரஸ் கட்சி இடைநீக்கம் செய்ய முடியாது என்றும் இதுகுறித்து டெல்லி மேலிடம் முடிவு எடுக்கும் என்றும் ரூபி மனோகரன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் ரூபி மனோகரன் மீதான சஸ்பெண்ட் உத்தரவு நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழகத்தின் காங்கிரஸ் கட்சி மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சஸ்பெண்ட் உத்தரவை நிறுத்தி வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.