அருட்செல்வரின் வீடு புரோக்கர்கள் சந்திக்கும் இடமாகி விட்டதே.. நாஞ்சில் சம்பத் வருத்தம்!
பொள்ளாச்சி மகாலிங்கம் வீடு குறித்து நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: பொள்ளாச்சி மகாலிங்கம் வீடு புரோக்கர்கள் சந்திக்கும் இடமாக மாறிவிட்டதே என்று நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
பொள்ளாச்சி மகாலிங்கம் இல்லத்தில் சில தினங்களுக்கு முன்பு அதிமுக - பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுகுறித்து பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பதிவில், "அருட்ச்செல்வர் நா. மஹாலிங்கம் அவர்களின் வீடு புரோக்கர்கள் சந்திக்கும் இடமாக மாறிவிட்டதே .. அருட்ப்ரகாச வள்ளலாரும் , அண்ணல் காந்தியடிகளும் அறியாமல் செய்த இந்த பாவத்தை மன்னிப்பார்களாக!" என்று பதிவிட்டுள்ளார்.
அருட்ச்செல்வர் நா. மஹாலிங்கம் அவர்களின் வீடு புரோக்கர்கள் சந்திக்கும் இடமாக மாறிவிட்டதே .. அருட்ப்ரகாச வள்ளலாரும் , அண்ணல் காந்தியடிகளும் அறியாமல் செய்த இந்த பாவத்தை மன்னிப்பார்களாக!
— Nanjil Sampath (@NanjilPSampath) February 17, 2019
நாஞ்சில் சம்பத்தின் இந்த ட்வீட்டிற்கு கீழே, "மதிமுக, அதிமுக., அமமுக என மாறி மாறி நீங்கள் மட்டும் கூட்டணி வைத்தீர்களே அது மட்டும் சரியா" என்று நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர். எனினும் நாஞ்சில் சம்பத்தின் இந்த பதிவு ஒருவகையில் ஏற்கக்கூடியதே.
ஏனெனில் கொங்கு மண்டலத்தின் ஒரு காலத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக விளங்கியவர்தான் பொள்ளாச்சி மகாலிங்கம். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராகவும் இருந்தவர். ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து விலகி, ஆன்மீகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
மகாத்மா காந்தி மற்றும் வள்ளலார் மீது ரொம்பவும் மரியாதையும் ஈடுபாடும் கொண்டவர். காந்தி - வள்ளலார் விழாக்களை தவறாமல் நடத்தி வந்தார். காங்கிரஸ் பிரமுகராக அறியப்பட்ட ஒருவர் வீட்டில் பாஜக சம்பந்தமான கூட்டணி பேச்சுவார்த்தையா என்பது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் உள்ளது!