பள்ளிக்கு வாடகையும் கல்யாண மண்டபத்திற்கு வரியும் கட்டவில்லை.. இவரா ஊழலை ஒழிப்பார்?.. நாஞ்சில் சம்பத்
சென்னை: ரஜினிகாந்த் ஒரு அட்டகத்தி என்றும் ஆன்மீக அரசியல் என்றாலே அது பாஜக அரசியல்தான் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஜனவரியில் கட்சி தொடக்கம். அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31, மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்நா எப்போவும் இல்ல என ரஜினிகாந்த் தனது பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
ரஜினியின் இந்த அறிவிப்புக்கு பலர் வாழ்த்தியும் இன்னும் பலர் விமர்சனமும் செய்தனர். இதுகுறித்து நாஞ்சில் சம்பத்திடம் ஒரு தமிழ் முன்னணி ஊடகம் நிறுவனம் நடத்திய நேர்காணலை பார்ப்போம்.
எம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு!
ரசிகர்கள்
நாஞ்சில் சம்பத் கூறுகையில் ரஜினியின் இந்த அறிவிப்புக்கு இன்றைக்கு மட்டும்தான் ஆயுள் உண்டு. இதுவும் புஸ்வானம் ஆகிப்போய்விடும். கட்சி தொடங்குவதற்கான எந்தவிதமான வாய்ப்பும் சூழலும் அவருக்கு அமையவில்லை. ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார். பார்த்துக் கொண்டே இருங்கள். அவரது ரசிகர்களை மாற்றி மாற்றி ஏமாற்றுவது நல்லதல்ல.
55 வயது
மக்களையே சந்திக்காமல் எப்படி கட்சி நடத்துவார்? எப்படி தன்னுடைய இயக்கத்தை முன்னெடுத்து செல்ல முடியும்? அதனால், ஏழேழு ஜென்மத்திற்கும் தமிழகத்தில் ரஜினி கட்சி தொடங்கமாட்டார். அவருக்கு மக்கள் எழுச்சியும் உண்டாகாது. ரஜினி மன்றத்தில் இருப்பவர்கள், ஆதரிப்பவர்கள் எல்லோருக்கும் 55 வயதிற்குமேல்தான் ஆகிறது. அதனை வைத்து என்ன அறுவடை செய்ய முடியும்?
பகை
தமிழருவி மணியன் திராவிட இயக்கத்தின் மீது சித்தாந்த ரீதியாக பகை உள்ளவர். எனது சிறு வயதிலேயே, திராவிட கழகங்களை விமர்சித்து தொடர்ந்து துக்ளக்கில் எழுதி வந்தவர். அப்படிப்பட்ட தமிழருவி மணியன்தான், இக்கட்சியின் மேற்பார்வையாளர் என்பதால் திராவிட இயக்கத்துக்கு ஏதாவது ஒரு பலவீனத்தை உருவாக்க முடியுமா என்பதன் அரசியல் இது. ஆனால், தமிழருவி மணியன் இருக்கும் இடத்தில் அரசியல் சரித்திரம்தான் இருக்கும். அரசியல் நடக்காது.
ஜெயலலிதா
கருணாநிதியோடும் ஜெயலலிதாவோடும் ரஜினியை ஒப்பிடுகிற குருமூர்த்தியின் அரசியல் அறியாமைக்காக நான் அனுதாபப்படுகிறேன். ஜெயலலிதாவின் துணிச்சலும் ஏழை மக்கள் மீது அவருக்கு இருந்த கரிசனமும் ரஜினிக்கு இருக்கிறதா என்பது முதல் கேள்வி. கலைஞரிடம் இருந்த கூர்மையான அறிவும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூகத்தில் உயர வேண்டும் என்ற சமூக பார்வையும் ரஜினிக்கு இருக்கிறதா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
படங்கள்
தமிழக சினிமாவில் பாடலுக்காகவே ஓடிய படங்கள் உண்டு. தியாகராஜ பாகவதர் படங்கள் செய்த சாதனை அது. பாட்டுக்காகவே ஓடிய படங்களை வசனத்திற்காகவும் ஓடும் என்று நிரூபித்தவர் கலைஞர் என்பது வரலாறு. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது துணிச்சலுடன் 'மிசா தவறு' என்று இந்திரா காந்தியை எதிர்த்தவர்.
பிழைப்பு
கலைஞர் என்ற காவியத் தலைவனோடு அட்டைக்கத்தி ரஜினியை தயவு செய்து ஒப்பிடவேண்டாம். ரஜினி கட்சி தொடங்கினால் குருமூர்த்தி, அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் போன்றோருக்கு கொஞ்சநாள் பிழைப்பு நடக்கும். அவ்வளவுதான்.
யாருக்கு பாதகம்
ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருக்குத்தான் மிகப்பெரிய பாதகம். அவருடைய உடல்நிலை ஏற்கனவே சீர்கெட்டிருக்கிறது என்பதை அறிவித்திருக்கிறார். 'கொரோனா யாரை எப்போது தாக்கும் என்பது யாருக்கும் தெரியாது' என்று அவரே சொல்லிவிட்டு, இப்போது கட்சி ஆரம்பித்திருப்பதால் பாதிப்பு அவருக்குத்தான்.
கல்யாண மண்டபத்திற்கு வரி
இவர்கள் நடத்தும் பள்ளிக்கு வாடகை கட்டவில்லை. இவர்களின் கல்யாண மண்பத்துக்கு வரி கட்டவில்லை. இவரா ஊழலைப் பற்றிப் பேசுவது? இவர் படத்திற்கு எத்தனை கோடி ரூபாய் சம்பளம் வாங்கினேன் என்று இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை. படத்திற்கு நடிக்க வாங்கிய பணத்தை எங்கு முதலீடு செய்திருக்கிறார் என்று எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா? இப்படி மறைமுகமாக இருக்கும் ரஜினியே மிகப்பெரிய ஊழல்வாதிதான்ம என்றார் நாஞ்சில் சம்பத்.