மன்னிப்பு கேளுங்கள்... இல்லையென்றால் வழக்கு தொடர்வேன்... அமித் ஷா பேச்சுக்கு நாராயணசாமி பதிலடி
சென்னை: உள் துறை அமைச்சர் அமித் ஷா என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்கவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர் மீது அவதூறு வழக்கு தொடருவேன் என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்
மேற்கு வங்க மாநிலத்திற்கு தமிழகத்துடன் இணைந்து வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் பிரச்சார பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகப் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தது. இருப்பினும், கடந்த சில வாரங்களில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பல எம்எல்ஏகள் ராஜினாமா செய்தனர். இதன் காரணமாக காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.
உள் துறை அமைச்சர் அமித் ஷா... கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்
அமித் ஷா குற்றச்சாட்டு
இந்நிலையில் உள் துறை அமைச்சர் அமித் ஷா பிப்ரவரி 28ஆம் தேதி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது காரைக்கால் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், ‛மத்திய அரசு புதுச்சேரியின் வளர்ச்சிக்காகக் காங்கிரஸ் அரசுக்கு ரூ. 15 ஆயிரம் கோடி வழங்கியது. ஆனால், பொதுமக்களுக்கு எவ்வித வளர்ச்சி பணிகளையும் காங்கிரஸ் அரசு மேற்கொள்ளவில்லை. மோடி அரசு புதுச்சேரிக்குக் கொடுத்த 15 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே? அதில் ஒரு பகுதியை நாராயணசாமி எடுத்துவிட்டு, மீத பணத்தைச் சோனியா காந்தி குடும்பத்திற்கு அனுப்பிவிட்டார்" என்று குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
அபாண்டமான பொய்
உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, "மோடி அரசிடமிருந்து 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வந்ததாகவும், அதில் ஒரு பகுதியை நான் வைத்துக்கொண்டு மீத தொகையைக் காந்தி குடும்பத்திற்கு அனுப்பிவிட்டேன் என அபாண்டமாகப் பொய் கூறியுள்ளார்.
வழக்கு தொடர்வேன்
அமித் ஷா என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்கவிட்டால் மன்னிப்பு கேட்க. இல்லையென்றால் அவர் மீது அவதூறு வழக்கு தொடருவேன். இதற்காக அமித் ஷா என்ன வழக்கு போட்டாலும் அதைச் சந்திக்க நான் தயாராக உள்ளேன்" என்றார்.
பாஜக மிரட்டல்
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியின்போது அப்போதைய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, அரசு நிர்வாகத்தில் தலையிடத் தொடங்கினார் என்றும் கோப்புகளைத் தாமதப்படுத்துவது, நிராகரிப்பது, போன்ற செயல்களில் ஈடுபட்டார் என்றும் குற்றஞ்சாட்டினார். மேலும், புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு தொடர்வேன் என்று மிரட்டி, பாஜக தன் பக்கம் இழுத்ததாகவும் திட்டமிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.