உயர் ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு.. ஒரே கல்லில் 3 மாங்காய்.. மோடி பிளான் பின்னணி!
Recommended Video
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் ஜாதியினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை அறிமுகம் செய்துள்ளதன் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கும் திட்டத்தில் உள்ளார்.
ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டக்கூடியவர்கள், 5 ஏக்கர் நிலத்திற்கு கீழே உள்ளவர்கள் உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் உயர்ஜாதி பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் வகையிலான சட்ட மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. உடனடியாக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக அநீதி
உயர் ஜாதியினர் என்று கூறப்படுவோர் நாட்டில் மொத்தமே மூன்று சதவீதம் பேர்தான் உள்ள நிலையில், 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுப்பது என்பது சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானது என்று கடும் எதிர்ப்புக் குரல்கள், பல்வேறு எதிர்க்கட்சி முகாம்களிலிருந்து ஒலிக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் பிரதமர் மோடி வைத்துள்ள கணக்கே வேறு என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
உயர் ஜாதி வாக்கு வங்கி
உயர்ஜாதி வாக்குவங்கியை நம்பியுள்ள கட்சி பாஜக. அந்த குறிப்பிட்ட ஜாதி பிரிவினர் தங்கள் வெற்றிக்காக பங்களிப்பை அளித்தால் தான் லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பெற முடியும் என்று கணக்கு போடுகிறது பாஜக. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இதையெல்லாம் அறிந்து தான் வைத்துள்ளார். சமீபகாலமாக வெளிப்படையாக மத வழிபாடுகளிலும் தனது ஜாதியை வெளிப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் ராகுல் காந்தி. இதற்கு பதிலடி தரும் வகையில் மோடி அரசு முன்னேறிய ஜாதி பிரிவினரின் நீண்டகால கோரிக்கையான இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
மத்திய பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் தனது ஆட்சியை பாஜக, காங்கிரசிடம் இழந்துள்ளது. அங்கு காங்கிரஸ் அரசுகள், விவசாய கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பின் மூலமாக வாக்காளர்களை ஈர்த்துள்ளன. இதற்கு பதிலளிக்கும் வகையில், இட ஒதுக்கீடு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது மோடி அரசு. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதை ஒரு சாதனையாக பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு உள்ளது.
ஆர்எஸ்எஸ்
மற்றொரு முக்கியமான காரணம், இந்த நடவடிக்கையின் மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்பை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார் மோடி என்கிறார்கள். உயர்ஜாதியினருக்கு சலுகைகள் வழங்க வேண்டும், ஜாதி அடிப்படையில், இட ஒதுக்கீடு இருக்க கூடாது என்பதெல்லாம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை திட்டம் என்று கூறப்படுகிறது. இந்துத்துவாவை முன்னெடுக்க வேண்டும் என்பதும் முக்கிய அஜெண்டா. ஆனால், ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக மோடி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அவசர சட்டம் மூலம் ராமர் கோயில் கட்ட முடியாது என்று தெரிவித்து விட்டார்.
பிரதமர் வேட்பாளர்
இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நிதின் கட்காரியை முன்னிறுத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டது. இந்த தகவல் வெளியான நிலையில்தான், உயர் ஜாதியினருக்கு ஆதரவாக ஒரு நிலைப்பாட்டை எடுத்து ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மகிழ்ச்சி படுத்தியுள்ளார் மோடி என்கிறார்கள். இதன்மூலம் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த ஆர்எஸ்எஸ்சுக்கு இனி எந்த தடையும் இருக்காது என்று அவர் நம்புகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.