மாவட்ட பிரிப்பில்தான் அரசியல் எதிர்காலமே இருக்கு.. கடுமையாக போராடும் நத்தம் விஸ்வநாதன்
சென்னை: அதிமுகவில் மாவட்டங்கள் பிரிக்கப்படும் நிலையில் இதுதான் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய கடைசி சந்தர்ப்பம் என்பதால் எப்படியாவது மாவட்ட செயலாளர் பதவியை கைப்பற்றுவதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் படுதீவிரமாக இருக்கிறார்.
ஜெயலலிதாவின் 2011-16-ம் ஆண்டு ஆட்சி காலத்தில் அதிமுகவில் ஓபிஎஸ் உள்ளிட்ட ஐவர் அணிதான் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. ஜெயலலிதாவின் தலைமைக்கே சவால்விடுக்கும் வகையில் இந்த ஐவர் அணி விஸ்வரூபமாக வளர்ந்தது.
இந்த ஐவர் அணியில் இடம்பெற்றிருந்தவர் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். 2016 சட்டசபை தேர்தலின் போது ஐவர் அணி மீது கடும் கோபத்தை காட்டி அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இந்த கோப சுனாமியில் சிக்கி அரசியல் எதிர்காலத்தையே இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டவர் நத்தம் விஸ்வநாதன்.
தகுதி நீக்கம் கோரி திமுக தொடர்ந்த வழக்கு: ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
சரித்திரம் முடிவுக்கு வந்தது
நத்தம் விஸ்வநாதன் எளிதாக வெற்றி பெறக் கூடிய வாய்ப்புடன் இருந்தது அவரது சொந்த தொகுதியான நத்தம். ஆனால் ஜெயலலிதாவோ அவர் ஜெயிக்கவே வாய்ப்பு இல்லை என்கிற நிலை இருக்கும் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டாக வேண்டும் என்று உத்தரவிட்டார். நத்தம் விஸ்வநாதனும் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். அத்துடன் அவரது அரசியல் சரித்திரம் ஏறத்தாழ முடிவுக்கு வந்தது.
ஓபிஎஸ் அணியில் நத்தம்
ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய போது அந்த அணியில் கேபி முனுசாமிக்கு அடுத்த மூத்த தலைவராக வலம் வந்தார் நத்தம் விஸ்வநாதன். ஆனால் மாவட்ட அளவில் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த நத்தம் விஸ்வநாதனின் அணியே காணாமல் போனது. திண்டுக்கல் என்றால் அமைச்சர் சீனிவாசன், நகராட்சி தலைவராக இருந்த நிலையில் தரம் உயர்த்தப்பட்டதால் மேயரான மருதராஜ் ஆகியோரது கைகள்தான் ஓங்கி இருக்கிறது.
மாவட்டங்கள் பிரிப்பு
இந்நிலையில்தான் 2021 சட்டசபை தேர்தலை கணக்கில் கொண்டும் ஓபிஎஸ் அணிக்கும் வாய்ப்புகளை தர வேண்டும் என்பதற்காகவும் அதிமுகவின் கட்டமைப்புகள் மாற்றப்படுகின்றன. தற்போதைய மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றன. இப்படி மாவட்டங்கள் பிரிக்கப்படும் போது இயல்பாகவே ஒன்றியங்கள் உள்ளிட்ட அத்தனை கீழ் அமைப்புகளும் பிரிக்கப்படும். இது சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும் என்பது அதிமுக தலைமையில் கணக்கு.
திண்டுக்கல் மாவட்டம்
அதிமுகவின் இந்த அமைப்பு மாற்ற குழுவில் நத்தம் விஸ்வநாதனும் இடம்பெற்றிருக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. நிலவியல் அடிப்படை, ஜாதிய அடிப்படையில் திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகியவை திண்டுக்கல் கிழக்கிலும் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் திண்டுக்கல் மேற்கிலும் வரும். இதே அடிப்படையில்தான் அதிமுக மாவட்டங்கள் பிரிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டங்கள்
இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் தரப்பும் நத்தம் விஸ்வநாதன் தரப்பும் மோதுகின்றன. திண்டுக்கல் சீனிவாசனால் அரசியலில் ஏற்றம் பெற்றவர் நத்தம் விஸ்வநாதன். ஆனால் நத்தம் விஸ்வநாதன் விஸ்வரூபம் எடுத்த போது திண்டுக்கல் சீனிவாசனை இருந்த இடம் தெரியாத நிலைக்கு தள்ளினார். இப்போது சீனிவாசனின் காலம் என்பது மட்டுமல்ல.. அவரது வாரிசுகளும் களத்துக்கு வந்துவிட்டனர். ஆகையால் தம்முடைய பிடியை இறுகப்பிடித்துக் கொள்வதில் முனைப்பாய் இருக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்.
நத்தத்தின் முன் இருக்கும் வாய்ப்பு
நத்தம் விஸ்வநாதனைப் பொறுத்தவரையில் அவருக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு இது. திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தை தன்வசமாக்கிக் கொள்வதன் மூலம் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுவிட முடியும் என்பது அவரது தரப்பின் கணக்கு. ஆகையால் எப்படியாவது திண்டுக்கல் கிழக்கை கைப்பற்ற வேண்டிய கட்டாயம் நத்தம் தரப்புக்கு இருக்கிறது. இதனை சீனிவாசன் தரப்பும் உணராமல் இல்லை. மாவட்டங்கள் பிரிப்பும் செயலாளர்கள் அறிவிப்பும் வரும் வரை திண்டுக்கல் அதிமுக தலைகள் கையை பிசைந்து கொண்டே இருக்க வேண்டிய பரபர நிமிடங்களாகவே இருக்கின்றன.