கொரோனா போரில் களப்பணியாற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் - தேசிய மருத்துவ தினம்
கொரோனா போர்க்களத்தில் மருத்துவர்கள் அல்லும் பகலும் அயராது பணி செய்து வருகின்றனர்.
சென்னை: கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் மருத்துவ உபகரணங்களைக் கொண்டு மக்களைக் காக்க போராடி வரும் மனித கடவுள்களுக்கு தேசிய மருத்துவ தின வாழ்த்துக்களை அனைவரும் தெரிவித்து வருகின்றனர். முககவசம் அணிந்து ஒவ்வொரு நோயாளியையும் பரிவோடு கவனித்து மன அழுத்தம் போக்கி நோயில் இருந்து மீட்டு கொண்டு வருகின்றனர் மருத்துவர்கள். கடவுளின் பிரதிநிதிகளாய் வந்து நோயாளிகளின் கண்ணீரை துடைக்கின்றனர். அவர்களின் பரிவுதான் பல நோயாளிகளை குணமாக்குகிறது.
கொரோனாவிற்கு மருந்தே கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் நோயாளிகள் குணமடைவது எப்படி என்பது மாயாஜாலமல்ல மருத்துவர்களின் மந்திர ஜாலத்தினால்தான். நோயாளிகளுக்கு அவர்கள் கொடுக்கும் தன்னம்பிக்கைதான் டானிக், மாத்திரை எல்லாமே.
தங்களின் உயிரை பணயம் வைத்து உலகம் போற்றும் உன்னத பணியை செய்யும் மருத்துவர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர்.
"பாசிட்டிவ்".. ஷாக் ஆன ஓ.ராஜா.. வீட்டிலிருந்து வெளியிலேயே செல்லாத நிலையில் தொற்று வந்தது எப்படி?
உன்னத பணி மருத்துவம்
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள தனது வாழ்த்துச்செய்தியில்,உயிர் காக்கும் உன்னத பணியான மருத்துவ பணியை மனமுவந்து மேற்கொண்டுவரும் மருத்துவர்களை சிறப்பிக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நன்னாளில், அனைத்து மருத்துவர்களுக்கும் எனது "மருத்துவர் தின நல்வாழ்த்துக்களை" அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அர்ப்பணிப்பு உணர்வு
கொரோனாவிற்கு எதிரான அறப்போராட்டத்தில் மருத்துவர்களின் பங்கு அளப்பரியது. கொரோனா சூழலிலும் தன்னலம் கருதாது இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்போடு பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
மருத்துவர் தின வாழ்த்துக்கள்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்துச்செய்தியில், கொரானா வைரஸ் தொற்று பரவும் இந்த காலகட்டத்தில், தங்கள் உயிரை பணயம் வைத்து நம்மை காத்து மகத்தான சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு, மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவர்களை நேசிப்போம்
டாக்டர் ராமதாஸ் தனது வாழ்த்துச்செய்தியில், கொரோனா என்ற தீமையை ஒழிக்க உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். உயிர்காக்கும் மருத்துவர்களை நேசிப்போம்; போற்றுவோம்! என்று கூறியுள்ளார்.
சீமான் வாழ்த்து
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாழ்த்துச் செய்தியில், கொரோனா பரவல் தடுப்புப் பெரும்போரில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு தங்கள் உடலையும், உயிரையும் துச்சமெனக் கருதி மக்கள் உயிர்காக்க அரும்பாடாற்றி வரும் மருத்துவத்துறையைச் சேர்ந்த பெருந்தகைகள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
கடவுளின் பிரதிநிதிகள்
டிடிவி தினகரன் தனது வாழ்த்துச்செய்தியில், மக்கள் உயிர் காக்க, தன்னலம் பாராமல் பணியாற்றும் கடவுளின் பிரதிநிதிகளான டாக்டர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்!