விஸ்வரூபம் எடுத்த முரசொலி பஞ்சமி நில விவகாரம்.. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்
Recommended Video
சென்னை: பஞ்சமி நிலம்.. அதாவது தலித்துகளுக்கான நிலத்தில் திமுகவின் முரசொலி அலுவலகம் அமைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் பற்ற வைத்த நெருப்பு. இப்போது பரபரவென பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
ஆம்.. வெறும் அரசியல் அறிக்கை யுத்தமாக மட்டுமே இல்லாமல், இந்த விவகாரம் தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இருந்து நோட்டீஸ் வரும் அளவுக்கு சென்றுவிட்டது.
இந்த விவகாரம் எப்படி ஆரம்பித்தது? எப்படி எல்லாம் திருப்பங்களை சந்தித்து சென்று கொண்டு இருக்கிறது, என்பதைப் பற்றி ஒரு சிறு ரவுண்டப்..
சிசிடிவி பதிவெல்லாம் ஒரு மாசத்துக்குதான் இருக்கும்.. எல்லாம் எங்களுக்கு தெரியும்.. சுரேஷ் ஷாக் தகவல்
அசுரன் படம் பார்த்த ஸ்டாலின்
நாங்குநேரி இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றிருந்தார் திமுக தலைவர் மு க ஸ்டாலின். போன இடத்தில் பிரச்சாரத்தை முடித்தோமா, வந்தோமா என்று இருக்க வேண்டாமே, சமூகத்துக்கு நல்ல கருத்துக்களை சொல்லக்கூடிய படம் ஒன்று வெளியே வந்துள்ளதாமே, என்று கேள்விப்பட்டார் ஸ்டாலின். இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள ஒரு திரையரங்குக்கு சென்று, முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் படைப்பில், தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தை கண்டு களித்தார்.
ஸ்டாலின் ட்வீட்
இந்த திரைப்படம், சாதிய ஒடுக்குமுறைகள் தொடர்பாக பேசும் திரைப்படம் என்பதால் படத்தை பார்த்த கையோடு தனது ட்விட்டர் பக்கத்தில், அசுரன் படம் மட்டுமல்ல, பாடம்.. பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து, சாதிய சமூகத்தை சாடும், சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் என்று தெரிவித்திருந்தார். அங்குதான் ஆரம்பித்தது சர்ச்சை.
வெடித்தது பஞ்சமி நிலம் பிரச்சினை
ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட்டைப் பார்த்த பாமக நிறுவனர் ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் அசுரன் கற்றுத்தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்தில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என்று தடாலடியாக ஒரு பதிவை வெளியிட்டார்.
இதையடுத்து தான் ஆரம்பித்தது அரசியல் அறிக்கை யுத்தம்.
ஸ்டாலின் சவால்
முரசொலி அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் இல்லை என்றும், வழிவழியாக தனியாருக்கு சொந்தமாக பாத்தியப்பட்ட பட்டா மனை என்றும், ஸ்டாலின் பதில் தெரிவித்தார். மேலும் அது பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலக தயார் என்றும், அதை நிரூபிக்கத் தவறினால் அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பாக, பட்டா ஒன்றை ஆதாரமாக ஸ்டாலின் கட்டியிருந்தார்.
ஆதி திராவிடர் மாணவர் விடுதி
ஆனால், முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால் இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன? முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன்பு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது. முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்றால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி வந்தது எப்படி? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
ஸ்டாலின் பதில் அறிக்கை
இந்த நிலையில் இன்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பொய்மையை மூலதனமாய் வைத்து அரசியல் வியாபாரம் நடத்தும் ராமதாஸ், கைப்பாவையாக செயல்படும் பாஜக மாநில செயலாளர் சீனிவாசன், பையனூர் பங்களாவுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் பஞ்சமி நிலத்தை மீட்பார்களா? என்று கேட்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
|
நோட்டீஸ்
இப்படி அறிக்கை யுத்தமாக சென்று கொண்டிருந்த நிலையில் பாஜக மாநில செயலாளர், பேராசிரியர் சீனிவாசன், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் இடத்தில், அமைந்திருப்பதாக கூறி தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட ஆணையம், இன்னும் ஒரு வாரத்தில் இது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் இந்த விவகாரம் தற்போது அரசின் கைகளுக்கு வந்துள்ளது. தலைமைச் செயலாளர் அடுத்த வாரம் அனுப்ப உள்ள அறிக்கை தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்சமி நிலம் என்றால் என்ன?
நிலமற்ற தாழ்த்தப்பட்ட இன மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, 1892 ஆம் ஆண்டில் இந்திய பிரிட்டிஷ் அரசால் ஒதுக்கப்பட்ட வேளாண் விளைநிலங்கள் தான் பஞ்சமி நிலங்கள் என்று அழைக்கப்படும். இதை அவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பல சட்ட பாதுகாப்பு தரப்பட்டன. தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தான் இந்த நிலங்களை விற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல ஷரத்துக்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இருப்பினும் இப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள், நாடு முழுக்கவும் பல பெரும்புள்ளிகளாலும், சுரண்டல்காரர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு, இப்போது அதன் அளவு கணிசமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.