800 சிசிடிவி கேமராக்கள்.. 2 கடற்படை கப்பல்கள்... 5,000 போலீசார்.. மீன்பிடிக்க தடை!
Recommended Video
மாமல்லபுரம்: பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான சந்திப்பு நடைபெறும் மாமல்லபுரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபப்ட்டுள்ளன. 800 சிசிடிவி கேமராக்கள், 5,000 போலீசார் மட்டுமல்லாது 2 கடற்படை போர் கப்பல்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மோடி, ஜின்பிங் இடையேயான சந்திப்பு நாளை மறுநாள் முதல் 12-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்காக இருநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளும் மாமல்லபுரத்தில் முகாமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மாமல்லபுரத்தில் புராதன சிற்பங்களைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து சாலையோர கடைகளும் அகற்றப்பட்டு ஒரு நவீன சுற்றுலா நகரமாக்கப்பட்டுள்ளது மாமல்லபுரம்.
மேலும் நகரம் முழுவதும் 800 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு ஒவ்வொரு அசைவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சீனா அதிபருக்கு எதிராக திபெத்தியர்கள் போராட்டம் நடத்த முயற்சித்து வருகின்றனர்.
இதனால் திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் திபெத்தியர்கள் நட,மாட்டம் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மாமல்லபுரத்தில் 5000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசுகின்றனர் என்பதால் மாமல்லபுரம் கடற்பரப்பில் 2 போர் கப்பல்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மீன்பிடிக்கவும் தடை
இதனிடையே ஈஞ்சம்பாக்கம், பனையூர், கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம், புதுப்பட்டினம் என பல இடங்களில் மீனவர்கள் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மாமல்லபுரம் சாலை ஓர கடைகள் அகற்றப்பட்டு அவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். தற்போது மீனவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.