மைக்ரோ வேவ் ஓவனில் 7 கிலோ தங்கம் கடத்தல்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
சென்னை ஏப்போர்ட்டில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை: அதிரடி சோதனையை சென்னை விமான நிலைய அதிகாரிகள் நடத்தியதில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 7 கிலோ இருக்கலாம் என கூறப்படுகிறது.
தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதை மையமாக வைத்து அதன் கடத்தல்களும் அதிகரித்து வருகிறது. தற்போது தீபாவளி சீசன் தொடங்கிவிட்டதால், தங்க கடத்தல்கள் இன்னும் பெருகிவிட்டது.
மீனம்பாக்கம் விமான நிலையம்
இதன் காரணமாக வருவாய்த்துறை அதிகாரிகள் கடத்தல் ஏதும் நடக்கிறதா என்பதை அறிய கொண்டு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். இந்த சோதனையை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தி உள்ளனர். அதன்படி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ரகசிய தகவல்
இந்நிலையில் மலேசியா நாட்டில் இருந்து மிகப்பெரிய அளவிலான தங்க கட்டிகளை சென்னைக்கு கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது நேபாளம் நாட்டை சேர்ந்த 2 இளைஞர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடினார்கள். அவர்களின் உடமைகளை சோதனை நடத்தினர்.
தங்க கடத்தல்
அவர்கள் 25 முதல் 30 வயது உடையவர்கள் என கூறப்படுகிறது. அதிகாரிகள், அவர்களின் சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் மைக்ரோ வேவ் ஓவன் இருந்தது. மைக்ரோவேவ் ஓவன்களை கழட்டி பார்த்தால் அதில் சுமார் 7 கிலோ மதிப்பிலான கடத்தல் தங்கம் இருந்ததை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர்.
இரண்டரை கோடி ரூபாய்
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரூபாய் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இது சம்பந்தமாக தொடர் விசாரணையை விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.