தண்ணீர் பஞ்சம்.. முழு பூசணியை சோறே இல்லாமல் மறைக்க பார்க்கும் தமிழக அரசு.. டிடிவி தாக்கு
சென்னை: திசைதிருப்பும் அறிவிப்புகளுக்குப் பதில் தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ராமநாதபுரத்தில் முடங்கி கிடக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டிடிவி தினகரன், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் உள்ள இயந்திரங்கள் பழுதாகியுள்ளன. அவற்றை சீரமைக்க நிதி ஒதுக்காததால் அத்திட்டம் முடங்கியுள்ளதாக வெளியான செய்தி வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாநிலம் முழுவதும் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் பல கிலோமீட்டர் தூரம் அலையும் அவல சூழல் உள்ளது. குடிநீர் லாரிகளுக்காக இரவெல்லாம் கண்விழித்து கிடக்கிறார்கள். அதிலும் தலைநகர் சென்னையில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு குடிக்க கூட தண்ணீர் இல்லாத அவலம் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத இத்தகைய வறட்சி பற்றி நிபுணர்கள் எச்சரித்தும், அதை சமாளிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்காத தமிழக அரசு வழக்கம் போல கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதை தொடருகிறது
உரிய கட்டமைப்பு வசதிகள் உள்ளதான என ரயில்வே துறையிடம் கலந்து ஆலோசிக்காமலேயே வேலூரில் இருந்து, நாள்தோறும் ரயிலில் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்போவதாக அறிவித்தார்கள். இது குறித்து தினமும் முதலமைச்சர் பழனிசாமியும், அமைச்சர் வேலுமணியும் பேட்டி மட்டும் கொடுக்கிறார்களே தவிர இன்று வரை வேலூரில் இருந்து தண்ணீர் வந்தபாடில்லை.
அவசர, அவசரமாக இடத்தைச் சரி செய்து கடல்நீரை குடிநீராக்கும் புதிய ஆலைக்கு பெரிய விழா எடுத்து அடிக்கல் நாட்டுகிறார்கள். இந்த ஆலை ஓராண்டுக்குப் பிறகு செயல்படும் என்று சொல்கிறார்கள். கூடவே தண்ணீர் பஞ்சமே இல்லை வெறும் தட்டுப்பாடுதான் என கொஞ்சமும் வாய் கூசாமல் பேசும் அமைச்சர்கள், முழுப் பூசணிக்காயையும் சோறே இல்லாமல் மறைக்கப் பார்க்கிறார்கள் என டிடிவி தினகரன் கடுமையாக சாடியுள்ளார்.
தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க யோசனை ஒன்றையும் கூறியுள்ளார் டிடிவி. அதன்படி நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்குள் முறையாக பராமரித்து வைக்கப்பட்டிருக்கும் பெரிய நீர் நிலைகளில் இருந்து, தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுடன் இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி முதல்வர் பழனிச்சாமியும் அமைச்சர் வேலுமணியும் இதற்கான அனுமதியைப் பெற வேண்டும். தண்ணீருக்காக தவிக்கும் மக்களைத் திசை திருப்பும் அறிவிப்புகளுக்குப் பதிலாக இத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கை வாயிலாக டிடிவி தினகரன் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.