ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு
சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட செய்ய வேண்டும் என திமுக மகளீர் அணி செயலாளர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டம் ஒழுங்கு பிரிவின் சிறப்பு டிஜிபி இருந்த ராஜேஷ் தாஸ் மீது டெல்டா மாவட்டத்தில் எஸ்.பியாக பணியாற்றும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கொடுத்த பாலியல் புகார் தற்போது பெரிய பூதாகரமாகி உள்ளது.
இந்தப் புகார் தொடர்பாக விசாரிக்க தமிழ்நாடு அரசு 6 பேர் கொண்ட கமிட்டியை அமைத்துள்ளது. அதோடு தமிழக சட்டம் ஒழுங்கு பிரிவின் சிறப்பு டிஜிபி பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜேஷ் தாஸ் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி திரிபாதி உத்தரவு
திமுக ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் எஸ் பி கண்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக மகளிர் அணி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சஸ்பெண்ட் செய்ய வேண்டும்
அப்போது பேசிய கனிமொழி, "இந்த ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் இந்த ஆட்சி செயல்படுகிறது. மக்களுக்கு சரியான ஒரு நியாயம் கிடைப்பதில்லை. பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ராஜேஷ் தாஸ் மீது வழக்கு விசாரணையில் உள்ளது. அவர் தற்போது காத்திருப்பு பட்டியல் வைக்கப்பட்டுள்ளார். இதுவரை அவரை பணி நீக்கமோ பணி இடைநீக்கமோ செய்யவில்லை.
விசாரணை பாதிக்கப்படும்
இப்படி பதவி அதிகாரத்தின் மீது இருக்கக்கூடிய ஒருவர் மீது விசாரணை நடத்தும் போது நிச்சயமாக அவர்கள் சாட்சிகளை சொல்ல வருபவர்களை தடுத்து நிறுத்து விடுவார்கள். ஏற்கனவே, சாட்சி சொல்ல வந்தவர்களை எஸ்.பி. கண்ணன் தடுத்து நிறுத்தியுள்ளார். இவர் பதவியில் இருக்கின்ற காரணத்தினால் விசாரணை நியாயமாக நடக்க வாய்ப்பு இல்லை. இதனால் குற்றம் சுமத்தப்பட்ட இருவரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
விசாரணை கமிஷன் அமைக்கப்படும்
ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால் அவருக்குக் கீழ் வேலை செய்கின்ற பெண் அதிகாரிக்கு நிலைமை எப்படி இருக்கும். அவர்கள் எவ்வளவு பாதிப்பு பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் அனைத்தும் மூடி மறைக்கப்படுகின்றன. திமுக ஆட்சி வந்தவுடன் இதற்கென்று தனி விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்" என்றார். மேலும், தமிழகம் வெற்றி நடைபோடவில்லை வெற்று நடைபோடுகிறது என்றும் அவர் விமர்சித்தார்.