பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கு பாடுபடுங்கள்.. மோடிக்கு ப.சிதம்பரம் வாழ்த்து
சென்னை: மக்களவை தேர்தல் முடிவுகள் மூலம் அடுத்து பாரதிய ஜனதா தான் மீண்டும் அரியணை ஏற உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கும், பாஜகவிற்கும் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்கள் திட்டங்களுக்காகவும், வேகமான வளர்ச்சியை நோக்கியும் புதிய அரசு முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே பாஜக கூட்டணி தேசியளவில் முன்னிலை பெற்றது.
சுமார் 348 தொகுதிகளில் முன்னிலை பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் தனித்தே முன்னிலை பெற்றது பாரதிய ஜனதா. இதனையடுத்து கடந்த 2014-ம் ஆண்டை போலவே இம்முறையும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மோடியின் வெற்றிக்கும், பாரதிய ஜனதாவின் வெற்றிக்கும் உள்ளூர் தலைவர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்ற திரு நரேந்திர மோடி மற்றும் பாஜக ஆகியவர்களுக்கு என்னுடைய மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்
— P. Chidambaram (@PChidambaram_IN) May 23, 2019
அந்த வகையில் எதிர் முகாமில் உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சரான ப.சிதம்பரம் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனாவிற்கும், மோடிக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
ஒரே ஒரு தொகுதியில் ஆறுதல்.. தேனியில் மட்டும்தான் அதிமுக முன்னிலை.. வேற யார்? ஓபிஆர்தான்!
அதில் நாடாளுமன்றத் தேர்தலில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்ற திரு நரேந்திர மோடி மற்றும் பாஜக ஆகியவர்களுக்கு என்னுடைய மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயர்ந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு அவர்கள் பாடுபட என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம்... சொல்லி அடித்த பிரதமர் மோடி!!