இது பெரிய ட்விஸ்ட் .. நீட் குளறுபடி.. கேள்வி எழுப்பிய மாணவர்களை.. அதிர வைத்த தேசிய தேர்வு முகமை
சென்னை: நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி நான்கு நாட்களே ஆகியுள்ள நிலையில் நாடு முழுவதும் பல மாணவர்கள் தங்களுக்கு குறைவான மதிப்பெண்களே கிடைத்திருப்பதாக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதனிடையே ஓஎம்ஆர் நகலைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் முறையிட்டிருக்க வேண்டும் என்று அவர்களுக்கு பதில் வந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எம்பிபிஎஸ் பிடிஎஸ் உள்ளி.டட மருத்துவ படிப்புளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதை மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக நடந்த நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 56.44% பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே அக்டோபர் 18 ம் தேதி அன்று கோவை மற்றும் அரியலூரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் தங்களது ஓஎம்ஆர் சீட்டின் படி டாக்டருக்கு படிக்கும் அளவுக்கு மதிப்பெண் பெற்றுள்ளதாகவும், தங்கள் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் கோரினர். அவர்களில் ஒருவர் தேசிய தேர்வு முகமையை அணுகி உள்ளார்.இவர் ராஜஸ்தானில் உள்ள புகழ் பெற்ற கோச்சிங் சென்டரில் 2வது முறையாக நீட் நுழைவுத் தேர்வுக்கு படித்தவர் ஆவார்.
கொரோனா நோயாளிகளிடம் கொள்ளையடிக்கும் பெங்களூர் மருத்துவமனைகள்.. தப்பிக்க ஹெல்ப்லைன் இருக்கு பாஸ்
மதிப்பெண் தவறு
அப்படி அணுகிய மாணவரின் தாயார் வித்யா என்பவர் பிரபல ஆங்கில இணைய ஊடகத்திடம் பேசும் போது, "என் மகனுக்கு நீட் தேர்வில் மதிப்பெண் 720 க்கு 210 என்று வந்துள்ளது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் அல்ல இது. மீண்டும் விடைத்தாளை திருத்த வேண்டும். ஏனெனில் என் மகனின் மதிப்பெண்கள் எவ்வளவு இருக்கும் என்று சோதித்த போது 504 மதிப்பெண்கள் இருந்தது.. அந்த அளவிற்கே மதிப்பெண் பெறுவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். என் மகன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீட் தேர்வில் 210 மதிப்பெண் போடப்பட்டதில் தவறு நடந்திருக்கலாம்.
கையொப்பம் வித்தியாசம்
முன்னதாக நாங்கள், ஓஎம்ஆர் தாளின் நகலை என்.டி.ஏவிடம் அக்டோபர் 7 அன்று பெற்றோம் . அதை வைத்து பார்க்கும் போது ஏதோ சரியாக இல்லை என்று நான் உணர்ந்தேன். ஏனெனில் என் மகனின் கையொப்பம் அதில் வித்தியாசமாக இருந்தது. அந்த ஓஎம்ஆர் தாளில் உள்ள அடையாளங்களின் அடிப்படையிலும் மதிப்பெண்கள் மிகக் குறைவாக இருந்தது. அக்டோபர் 16 அன்று வெளியிடப்பட்ட முடிவுகளின்படி பார்த்தால் கூட அவன் பெற்ற இறுதி மதிப்பெண், நாங்கள் மின்னஞ்சலில் பெற்ற ஓஎம்ஆர் விடைத்தாளின் நகலின் படி இல்லை. இதுதான் எனது மகனின் விடைத்தாள் மற்றும் அவருக்குக் கிடைத்த இறுதி மதிப்பெண்கள் என்று அவர்கள் அனுப்பியதில் கூட 10-12 மதிப்பெண்கள் வித்தியாசம் உள்ளது." என்றார்.
இறுதி மதிப்பெண்கள்
மற்றொரு நீட் மாணவர் அளித்த பேட்டியில், தேர்வு முகமை வெளியிட்ட ஆன்சர் கீயின் படி, 400 மதிப்பெண்களைப் பெறுவேன் என்று எதிர்பார்த்தேன், ஆனால் 150 க்கு மேல் போகவில்லை என்றார். நீட் தேர்வில் முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து மாணவர்கள் எழுப்பியுள்ள இந்த குற்றச்சாட்டுகளின்படி பார்த்தால். தேசிய தேர்வு முகமை அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய அவர்களின் OMR விடைத்தாள்களின் நகல்கள் மற்றும் அவர்களின் இறுதி மதிப்பெண்கள் இடையே வித்தியாசம் இருந்ததாக கூறப்படுகிறது.
கேள்வி எழுப்பிய மாணவர்கள்
இதுபற்றி மாணவரின் தாயார் வித்யா தேசிய தேர்வு முகமையை தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் தேசிய தேர்வு முகமையால் எதுவும் செய்ய இயலாது என்பது போல் அவருக்கு ஷாக் தரும் பதில் வந்துள்ளது. இதுபற்றி வித்யா கூறுகையில், "நான் தேசிய தேர்வு முகமையை தொடர்பு கொண்டபோது, ஓ.எம்.ஆர் முரண்பாட்டை நாங்கள் ஏன் உடனே முறையிடவில்லை என்று அவர்கள் எங்களிடம் எதிர்கேள்வி கேட்டார்கள்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர்
ஓஎம்ஆர் நகலைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் நாங்கள் முறையிட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் எங்களிடம் சொன்னார்கள். ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் புகாரை எழுப்புவதற்கான நடைமுறை பற்றி பல பெற்றோர்களுக்கு இப்போதும் கூட தெரியாது. நகரத்தில் உள்ள எங்களுக்கே இதுபற்றி சரியாக தெரியாத போது, கிராமங்களைச் சேர்ந்த என் மகனை போன்ற பல நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எப்படி தெரிந்திருக்கும். அவர்களை நினைத்து தான் நான் மிகவும் அச்சப்பட்டேன் அவர்கள் என்ன செய்வார்கள்" என்று வித்யா கேள்வி எழுப்பினார். இது போன்ற புகார்களுக்கு தேசிய தேர்வு முகமை உடனே நல்ல முடிவு எடுக்க வேண்டும், அத்துடன் குளறுபடிகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.