நீட்: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவை நீர்த்துப்போக செய்யலாமா- மு.க ஸ்டாலின்
ஆளுநரும் முதல்வரும் கூட்டணி அமைத்து நீட் விலக்கு மசோதாவை நீர்த்து போக செய்தது போல் அன்றி உடனடியாக 7.5% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்
சென்னை: நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீடு மசோதாவிற்கு உடனடியாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று திமுக தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மு.க ஸ்டாலின் தனது பதிவில், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால், 7.5 சதவிகிதம் உள் இடஒதுக்கீடு அளித்து தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு இன்றுவரை தமிழக ஆளுநர் அவர்கள் ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதும், அதுகுறித்த எந்த அழுத்தத்தையும் ஆளுநருக்குக் கொடுக்காமல் முதல்வர் பழனிசாமி வேடிக்கை பார்ப்பதும்; அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்!
#NEET-ஆல் அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால் அளிக்கப்பட்ட 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததும், @CMOTamilNadu வேடிக்கை பார்ப்பதும் துரோகம்!
— M.K.Stalin (@mkstalin) October 19, 2020
ஆளுநர்-CM-பாஜக கூட்டணி நீட் விலக்கு மசோதாவை நீர்க்கச் செய்தது போல் இன்றி, இதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்குக! pic.twitter.com/7LtqoeoGnF
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முன்பு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், தமிழக ஆளுநர் முதல்வர் மத்திய பா.ஜ.க. அரசு ஆகியோர் ஒரு ரகசியக் கூட்டணி அமைத்து, நீர்த்துப் போக வைத்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவையும் நீர்த்துப் போக வைத்து விடக்கூடாது என்றும் - நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மசோதாவிற்கு உடனடியாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.