நீட் தேர்வு: தென்னகத்தில் ஆந்திராவில்தான் அதிக தேர்ச்சி!
Recommended Video
சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் தென்னிந்திய மாநிலங்களில் ஆந்திராவில்தான் அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது. இதனால் மாநில பாடத்திட்டத்தின் கீழ் கல்வி கற்கும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு தகர்ந்து போகிறது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற தமிழகத்தின் ஒருமித்த குரல் நிறைவேறவில்லை. இதனால் நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் தற்கொலை செய்யும் துயரம் தொடர் கதையாகிறது.
இந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த 2 மாணவிகள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில் முன்னேறிய தமிழ்நாடு, நீட் தேர்வில் மிகவும் பின்தங்கியே இருக்கிறது. இதற்கு காரணம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் வினாத்தாள் தயாரிக்கப்படுவதுதான்.
நீட் தேர்வு.. தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி.. முதலிடம் பிடித்தார் ஸ்ருதி!
நீட் தேர்வில் தமிழகத்தில் மொத்தம் 48.57% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 39.56% மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருந்தனர். தமிழகத்தில் மொத்தம் 1,23, 078 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் 59,785 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்ருதி என்ற தமிழக மாணவி அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்துள்ளார்.
தென்னிந்திய மாநில்ங்களில் ஆந்திராவில்தான் அதிக மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு 70.,72% மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஆந்திராவில் நீட் தேர்ச்சியானது 72.55% ஆக இருந்தது.
தெலுங்கானாவில் நீட் தேர்ச்சியானது 67.44% ஆக இருந்தது. கடந்த ஆண்டு இது 68.88%. ஜி மாதுரி ரெட்டி அகில இந்திய அளவில் 7-வது இடத்தைப் பெற்றிருக்கிறார். கர்நாடகா மாநிலம் 63.25% தேர்ச்சி பெற்றுள்ளது. அம்மாநிலத்தின் பனீந்தரா என்ற மாணவர்கள் அகில இந்திய அளவில் 36-வது இடத்தைப் பிடித்துள்ளார்.