ஆள் மாறாட்ட மோசடி.. அனைத்து நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம்
சென்னை: ஆள்மாறாட்ட மோசடி எதிரொலியாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்து நீட் தேரவு பயிற்சி மையங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.
சிபிசிஐடி போலீசார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜேந்திரன் தேனி மாவட்ட க. விலக்கு போலீஸ் ஸ்டேசனில் தேனி மருத்துவ கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவர் ஆள் மாறாட்டம் செய்து முதலாம் ஆண்டு சேர்ந்ததாக புகார் அளித்தார்.
டிஜிபி திரிபாதி உத்தரவு
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு தமிழக டிஜிபி திரிபாதியின் உத்தரவுப்படி சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி புலன் விசாரணை
சிபிசிஐடி டிஜிபி ஜாபர் சேட் உத்தரவின்பேரில் ஐஜி சங்கர் மேற்பார்வையில் தேனி சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உதித் சூர்யா தந்தையுடன் கைது
முதல்கட்ட விசாரணையில் மாணவர் உதித் சூர்யா ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றது உறுதி செய்யப்பட்டு கடந்த 26ம் தேதி கைது செய்யப்பட்டார். அதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை வெங்கடேசனும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
நீட் தேர்வு பயிற்சி மையம்
இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு அந்த பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் விவரம்
தமிழகத்தில் இருந்து விண்ணப்பத்து இருந்தவர்களின் ஒரே பெயர் முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்ச்சி மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் கேட்கப்பட்டு, நீட் தேர்வை நடத்தும் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமைக்கு (என்.டி,ஏ) கடிதம் அனுப்பப்பட்டுள்ளது" இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.