நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள்.. கருணையை கசக்கி எறிந்த பாஜக.. ஸ்டாலின் சரமாரி தாக்கு
Recommended Video
சென்னை: நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் இன்று தற்கொலை செய்துகொண்டுள்ள 2 மாணவிகள் குடும்பத்திற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் மாணவிகளின் மரணம் அவர்களது பெற்றோரை மட்டுமல்ல, தமிழக மக்களையும் நீங்காத துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
2019-2020-ம் கல்வியாண்டிற்கான மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவு தேர்வு கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டது நடப்பாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்
இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத வேதனையில்திருப்பூரை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ பட்டுக்கோட்டையை சேர்ந்த மாணவி வைஸ்யா ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளர். ரிதுஸ்ரீ நீட் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வியுற்றதால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் மாணவி வைஸ்யா தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்தார்
தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இச்சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், தமிழக இளைஞர்களின் மருத்துவ கல்வி கனவை நீட் தேர்வு மோசமாக பாழாக்கியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். மாணவர்களின் தற்கொலையை கண்டு கொள்ளாமல் பாஜக அரசு கருணையை கசக்கி எறிந்துவிட்டதாக சாடியுள்ளார்.
நீட் தேர்வு துவங்கியதில் இருந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை துளி கூட எண்ணிப்பார்த்து உணர பாஜக மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற அதிமுக அரசு எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எத்தனை உயிர் போனால் நமக்கென்ன என பதவியில் நீடிப்பதில் மட்டுமே அதிமுக அரசு கவனம் செலுத்துவதாக புகார் கூறியுள்ளார். நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய பாஜக அரசு உடனடியாக ஒப்புதல் பெற்று தர வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நீட் பிரச்னையை நாடாளுமன்றத்தில் ஆணித்தரமாக எழுப்பி உரிய தீர்வு காண திமுக முயற்சிக்கும் என கூறியுள்ள ஸ்டாலின், எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நீட் பிரச்னையை திமுக எம்.பி.க்கள் எழுப்புவார்கள் என உறுதிபட கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டு நீட் தேர்வின் போதும் மாணவர்களின் தற்கொலை தொடர்வது நாட்டுக்கும், தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல என கூறியுள்ளார்.