லட்சக்கணக்கில் முறைகேடு.. 3 மாணவர்கள் சிக்கிய விவகாரத்தில் வெளிவரும் பரபர தகவல்கள்
Recommended Video
சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரத்தில் மேலும் 3 பேர் சிக்கி உள்ள நிலையில் இவர்கள் அனைவருமே நீட் தேர்வு எழுத வெளிமாநிலத்தில் தேர்வு மையங்களை தேர்வு செய்தனர். இவர்கள் சிக்கிய நிலையில் இதில் பல லட்சம் ரூபாய் கைமாறி இருப்பது உள்ளிட்ட பரபர தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த மாணவர் உதித்சூர்யா மும்பையில் நீட் தேர்வு எழுத தேர்வு மையத்தை தேர்வு செய்தார். அங்கு வேறு ஒருவரை வைத்து தேர்வு எழுதி வெற்றி பெற்றார். அதன்பிறகு கலந்தாய்வில் பங்கேற்று தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
இந்த விவகாரம் ரகசிய மெயில் ஒன்றால் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், உதித்சூர்யா தலைமறைவானார். அவரை தேனி க.விளக்கு போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இதனிடையே நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றி உத்தரவிட்டது.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம்.. மும்பை மாணவருக்கு ரூ. 20 லட்சம்.. ஒருவரே பலருக்கு தேர்வு எழுதியது அம்பலம்
சிறையில் அடைப்பு
இதற்கிடையே உதித் சூர்யாவை தேடிவந்த தனிப்படைபோலீசார் திருப்பதி மலை அடிவாரத்தில் வைத்து கைது செய்தனர். அவருடன் அவரின் தந்தை வெங்கடேசன், தாய் கயல்விழி ஆகியோரையும் கைது செய்தனர். இதையடுத்து சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் தேனிக்கு அழைத்து வந்தனர். இதில் உதித் சூர்யாவும், அவரது தந்தையும் டாக்டருமான வெங்கடேசன் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் தாய் கயல்விழிக்கு இதில் தொடர்பு இல்லை என்பது விசாரணையில் தெரியவந்ததால் அவர் மட்டும் விடுவிக்கப்பட்டார்.
மாணவர் சேர்க்கையில்
இதனிடையே மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் கலந்தாய்வு முதல் மாணவர் சேர்க்கை வரை பல்வேறு கட்டங்களில் முறைகேடுகள் நடந்திருக்கக்கூடும் என்று சந்தேகித்த சிபிசிஐடி போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர்.
மாணவர் பிரவீன்
இந்நிலையில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக சென்னையில் நேற்று ஒரு மாணவி உள்பட 3 பேர் சிபிசிஐடி போலீசாரிடம் சிக்கி உள்ளனர். அவர்களில் ஒருவர் பெயர் பிரவீன். இவர் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
மாணவர் ராகுல்
மற்றொரு மாணவரின் பெயர் ராகுல். இவர் பாலாஜி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார். இதேபோல் அபிராமி என்ற மாணவி பிடிப்பட்டுள்ளார். இவர் சென்னையை அடுத்த திருப்போரூரில் உள்ள சத்ய சாய் மருத்துவ கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
லட்சக்கணக்கில் பணம் மாறியுள்ளது
பிடிப்பட்ட 3பேரையும் சென்னை சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து சிபிசிஐடி போலீசார், துருவி துருவி விசாரணை நடத்தினர். இதில் இவர்களுக்காக உத்தரப்பிரதேசத்திலும், டெல்லியிலும் வேறு நபர்கள் நீட் தேர்வு எழுதியதையும் இதற்காக லட்சக்கணக்கில் பணம் கைமாறியதையும் 3 பேரும் ஒப்புக்கொண்டனர். இந்த 3பேரும் இன்று தேனிக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
விரிவான விசாரணை
இதனிடையே நீட் தேர்வு எழுத வருபவர்களிடம் கடும் சோதனை நடத்தப்படுகிறது. ஆனால் ஹால்டிக்கெட் வழங்கும் போது, கலந்தாய்வின் போது, மாணவர் சேர்க்கையின் போதும் ஆள்மாறாட்டத்தை கவனிக்காமல் விட்டது எப்படிது புரியாத புதிராக உள்ளது. இந்த புதிருக்கு விடை தேடி மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலங்களிலும் விரிவான விசாரணை நடத்தப்பட சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் இந்த விவகாரத்தில் அதிகாரிகள் சிக்குவார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.