நீட் ஆள்மாறாட்ட வழக்கு.. உதித் சூர்யா, தந்தை டாக்டர் வெங்கடேசனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்
சென்னை:நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா, தந்தை வெங்கடேசனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை துறையில் மருத்துவராக உள்ளார்.
இவரது மகன் உதித் சூர்யா. இவர் கடந்த 2019-2020 ஆகிய கல்வியாண்டுக்கான மருத்துவ சேர்க்கைக்கு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகாரின் பேரில் க. விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.ஆனால் அதற்குள் உதித் சூர்யா குடும்பத்தோடு தலைமறைவானார்.
முன்ஜாமின் மறுப்பு
உதித் சூர்யாவை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தநிலையில் வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. அதேநேரம் உதித் சூர்யா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தள்ளுபடியும் செய்யப்பட்டது.
திருப்பதியில் கைது
இதன் பின்னர் தீவரம் காட்டிய சிபிசிஐடி போலீசார் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் உதித்சூர்யா, அவருடைய தந்தை வெங்கடேசன், தாயார் கயல்விழி ஆகியோரை கைது செய்தனர்.
வெங்கடேசன் ஒப்புதல்
தேனிக்கு அழைத்து வந்த சிபிசிஐடி போலீசார் தேனியில் சமதர்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
நீதிமனத்தில் ஆஜர்
இதையடுத்து உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் மீது ஆள் மாறாட்டம், கூட்டுச் சதி, மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் தேனி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்றம், உதித் சூர்யா, தந்தை வெங்கடேசனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க அதாவது அக்.10 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.