இந்தியே தெரியாமல் இந்தியில் தேர்வு எழுதி நீட் பாஸ்.. சென்னை மாணவர், தந்தையுடன் கைது
சென்னை: ஓசூரை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் தனுஷ் குமார் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது அம்பலம் ஆகி உள்ளது. இந்தியே தெரியாமல் பீகாரில் இந்தி மொழியில் நீட் தேர்வு எழுதி மோசடி செய்த மாணவரையும், அதற்கு உடந்தையாக இருந்த தந்தையையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த மாணவர் 2018ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் வென்றவர் என்பதால், அந்த ஆண்டு வெற்றி பெற்றவர்களின் பட்டியலை ஆய்வு செய்ய சிபிசிஐடி பரிந்துரை செய்துள்ளது.
நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட பின்னர் அதில் வெற்றி பெற வைக்க எங்களிடம் வாருங்கள் என்று பல ஆயிரம் பயிற்சி மையங்கள் புற்றிசலாக பரவின. அப்படி உருவான சில மையங்களில் படித்தவர்கள் முறைகேடாக நீட் தேர்வில் வெற்றி பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தனர்.
18 பேர் கைது
தேனி மருத்துவக்கல்லூரியில் நீட் தேர்வு எழுதிய மாணவர் வேறு ஒருவராகவும், படிப்பது வேறு மாணவராகவும் இருந்தது அம்பலமானது. இதையடுத்து வரிசையாக பல மாணவர்கள் நீட் தேர்வில் மோசடி செய்து வெற்றி பெற்றதாக சிபிசிஐடி போலீசிடம் சிக்கினார்கள். இதுவரை 2 மாணவிகள், 9 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் என 19 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்கள் சிக்கவில்லை, அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2018ல் தேர்ச்சி
இந்நிலையில்தான் மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு ரகசிய மெயில் ஒன்று வந்தது. அந்த மெயிலில் சென்னை மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவன் தனுஷ்குமாருக்கு இந்தி மொழி தெரியாது. ஆனால், 2018ம் ஆண்டு பிகாரில இந்தியில் நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மோசடி உறுதி
இதையடுத்து மாணவன் தனுஷிடம் மருத்துவக் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள் விசாரணையில் மாணவர் தனுஷ் 2018-ம் ஆண்டு நீட் தேர்வில் பிஹார் மாநிலத்தில் இந்தியில் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று, சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டத. அத்துடன் மாணவர் தனுஷுக்கு இந்தி தெரியவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர், இதுகுறித்து சிபிசிஐடி போலீஸாருக்குப் புகார் அளித்தார்.
தந்தையும் கைது
.புகாரை ஏற்ற சிபிசிஐடி போலீஸார் மாணவர் தனுஷ் மற்றும் அவரது தந்தை தேவேந்திரனை விசாரணைக்கு அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள் விசாரணையில் தனுஷுக்கு பதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவருக்கும், இதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த இடைத்தரகருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.20 லட்சம் கொடுத்து மகனை தேவேந்திரன் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்த்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து நேற்று முன்தினம் தனுஷ்குமாரையும், நேற்று தேவேந்திரனையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்கள். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் 2018ம் ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றர்களையும் பரிசோதிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர்.