நீட் தேர்வை ரத்து செய்ய சேர்ந்தே போராடுவோம்... அழைத்த முதல்வருக்கு ஓகே சொன்ன இபிஎஸ்
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்க வேண்டும் என்று மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி அதிமுக துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்க வேண்டும் என்று சட்டபையில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்று திமுக எதிர்கட்சியாக இருந்த போது போராடியது. நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் ரத்து செய்யப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
தீபாவளி வரை ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியம்.. 80 கோடி மக்களுக்கு பலன்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சட்டசபையில் அதிமுக கேள்வி
தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு விவகாரம் எதிரொலித்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக திமுக, அதிமுக இடையே விவாதம் நடைபெற்றது. சட்டசபையில் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா? என கேள்வி எழுப்பினார்.
முதல்வர் பதில்
இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு திமுக ஒருபோதும் துணை நிற்காது, தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு பெறுவோம் என்றார். அதிமுக ஆட்சியில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட தீர்மானம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.
நீட் வேண்டாம்
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தபோது நீட் விவகாரம் குறித்து வலியுறுத்தினேன். நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்று 4 முறை வலியுறுத்தினேன். கடந்த 2010ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு கிடையாது. விருப்பட்ட மாநிலங்களில் மட்டுமே நீட் இருந்தது என்று ஸ்டாலின் பேசினார்.
இபிஎஸ் உறுதி
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்கவேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் என்று தெரிவித்தார்.
ஆளுங்கட்சி, எதிர்கட்சி கூட்டணி
அண்டை மாநிலங்களில் முக்கிய பிரச்சினைகளுக்கு ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் இணைந்து குரல் கொடுக்கும். தமிழகத்திலும் அந்த சூழ்நிலை தற்போது உருவாகி வருகிறது. நீட் தேர்வு பிரச்சினையில் ஆளுங்கட்சியான திமுகவும் எதிர்கட்சியான அதிமுகவும் இணைந்து போராடும் என்று தெரிவித்துள்ளதால் புதுவிதமான அரசியல் கலாச்சாரம் தற்போது தமிழகத்தில் உருவாகியுள்ளது.