சரியான கோச்சிங் கொடுத்தா நம்ம தமிழக பசங்க நீட் தேர்வுல ஜொலிப்பாங்க.! விஜயகாந்த் கருத்து
சென்னை: மருத்துவ நுழைவுத் தோ்வான நீட்டுக்கு தமிழக அரசியல் கட்சிகள் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிக நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு பற்றி கருத்து தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக மாணவ, மாணவியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த செயல் திட்டத்தையும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஏற்றுக்கொள்ளாது.
ஆனால் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்க கூடிய நிலையை நீட் உருவாக்கியுள்ளதாக புகழ்ந்துள்ளார். எல்லாவற்றையும் அரசியலாக பார்க்காமல், மாணவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், மருத்துவ தரவரிசை பட்டியலில் முன்னிலை வகித்த மாணவ, மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நீட் தேர்வில் முதலிடம் பெற்றதை அடுத்து, மருத்துவப் படிப்புக்கான தேர்வு தரவரிசைப் பட்டியலிலும் மாணவி ஸ்ருதி முதலிடம் பெற்றுள்ளதற்கு வாழ்த்து கூறியுள்ளார். நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி என்ற அடிப்படையில், ஒரே மாதிரியான மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு என்பது மாணவர்களின் கல்வித் தகுதியை மேலும் மேம்படுத்தும்.
அதுமட்டுமல்லாமல் சாதாரண ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை நீட் தேர்வு உருவாக்கியிருக்கியுள்ளது. பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவ படிப்பில் சேர வேண்டிய நிலையும் மாற்றப்பட்டுள்ளது.
எந்த ஒரு நிர்வாக ஒதுக்கீடும் இல்லாமல் சாதாரண மாணவர்கள் கூட, மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாணவ, மாணவியர்கள் மிகவும் திறமைசாலிகள். அவர்களுக்கு முறையான கூடுதல் பயிற்சி அளித்தால் நீட் தேர்வில் இன்னும் அதிகமாக சாதிப்பார்கள்.
நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு என்கின்ற செய்தி வந்த அதே நாளில், மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் பல ஆயிரம் மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே நீட் விவகாரத்தை மேலும் அரசியலாக்க வேண்டாம்.
மாணவர்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும் பொழுது இந்தியா முழுவதும் ஒரே திட்டம் என்பதை ஏற்றுக் கொண்டு ஊக்கப்படுத்தினால், தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை இடத்திற்கு வந்து, அதிக மருத்துவர்கள் வருங்கால தமிழ்நாட்டில் வருவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.