சூர்யா மீது அவமதிப்பு நடவடிக்கை இல்லை... கவனமாக பேச வேண்டும் - ஹைகோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தல்
நடிகர் சூர்யா மீது அவமதிப்பு நடவடிக்கை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது அதே நேரத்தில் நீதிபதிகளையோ, நீதிமன்றத்தையோ விமர்சனம் செய்யக்கூடாது என்றும் அறிவுறித்தியுள்ளனர
சென்னை: நடிகர் சூர்யா பொது விசயங்களில் கருத்து கூறும் போது கவனமாக பேசவேண்டும் என்றும் நீதிபதிகளையோ, நீதிமன்றத்தையோ அவமானப்படுத்தும் வகையில் பேசக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு அறிவுறுத்தியுள்ளனர். சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளனர்.
நீட் தேர்வு அச்சத்தால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் மாநிலத்தில் அதிர்வலைகளை உருவாக்கியது. இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று
மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
நீட்-க்கு எதிராக நடிகர் சூர்யா போல பேசினால் வருமான வரித்துறை மூலம் மிரட்டுது பாஜக- கேஎன்.நேரு
நீட் பலிபீடம்
மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டும் காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். ஒரே நாளில் நீட் தேர்வு மூன்று மாணவர்களைக் கொன்று இருக்கிறது. இன்று நடந்ததே நேற்றும் நடந்தது. இனி நாளையும் நடக்கும் என்று கூறியிருந்தார்.
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை
சாதரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்.. வேதனையுடன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹுக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதி இருந்தார்.
தவறான விமர்சனம்
சூர்யாவின் கருத்து மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல்,தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது. நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சூர்யாவிற்கு ஆதரவு
அதே நேரத்தில் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ பி சாஹுவுக்கு முன்னாள் நீதிபதிகளான சந்துரு, பாட்ஷா, சுதந்திரம், அரிபரந்தாமன், அக்பர் அலி, கண்ணன் ஆகியோர் கடிதம் எழுதியிருந்தனர்.
நடவடிக்கை அவசியமில்லை
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அனுப்பிய கடிதம் கடந்த 14 ஆம் தேதி தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்து கேட்புக்காக அனுப்பப்பட்டது. இதனை ஆய்வு செய்த தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியமில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.
42233 வழக்குகளுக்கு தீர்வு
அரசு தலைமை வழக்கறிஞரின் கருத்தை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை என இன்று உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், கொரோனா பேரிடர் காலத்திலும் அர்பணிப்புடன் நீதிபதிகள் பணியாற்றியதாக குறிப்பிட்டுள்ள தலைமை நீதிபதி, காணொலி காட்சி மூலமாக 42 ஆயிரத்து 233 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சரியான கருத்துக்கள் அவசியம்
இதுபோன்று அர்பணிப்புடன் நீதிபதிகள் பணியாற்றிய சூழலில் நடிகர் சூர்யாவின் கருத்து நியாயமான விமர்சனமா என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளர். மேலும், தனி நபர்கள் தகவல்களை சரி பார்த்த பிறகே பொதுத்தளத்தில் தங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும் எனவும் இல்லாவிட்டால் அது தவறான பல கேள்விகளுக்கு இடம் கொடுத்து விடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
விமர்சிக்கும் போது கவனம்
அரசியல் சாசனம் அளித்துள்ள பேச்சு சுதந்திரம் என்பது நியாயமான விமர்சனத்தையும் உள் அடக்கியது தான் என குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், நடிகர் சூர்யாவின் கருத்துக்களை ஆய்வு செய்த போது, பொது விவகாரங்கள் குறித்து தனி நபர் கருத்து தெரிவிக்கும் போது, குறிப்பாக நீதிமன்றங்கள், நீதிபதிகள் மற்றும் அவர்களின் பணிகளை விமர்சிக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்
நியாயமான விமர்சனங்கள் நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்றாலும் கொரோனா காலத்தில் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளாமல் நடிகர் சூர்யாவின் விமர்சனம் என்பது அவசியமில்லாத ஒன்று எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அகரம் அறக்கட்டளை மூலமாக நடிகர் சூர்யா ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கி வருவதையும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.