I am sorry... I am tired நீட் தேர்வுக்கு எதிராக தமிழக மாணவர்களின் ஒட்டு மொத்த வாய்ஸ் - மு க ஸ்டாலின்
நீட் பிரச்சனையில் தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்துக்கொள்ளவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: I am sorry. I am tired என்று மதுரையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின்- ஆடியோ வாய்ஸ் ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் வாய்ஸ் என்பதை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது என்று சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் எண்ணிப் பார்க்க முடியாத அடக்குமுறைகள், கெடுபிடிகள் நடந்திருக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டசபைக் கூட்டம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் திமுக சார்பில் நீட் தேர்வு தொடர்பாக சிறப்புக் கவன ஈர்ப்புத்தீர்மானத்தை எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்து பேசினார்.
வங்க கடலோரத்தில் ஆறடி சந்தனப்பேழையில் உறங்கியும், உறங்காமல் உறங்கிக் கொண்டிருக்கும் நம்முடைய அறிவுலக மேதை பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 112வது பிறந்தநாள் இன்று. இதே சட்டமன்றத்தில் இருமொழிக் கொள்கையை, மாநில சுயாட்சியைத் தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அந்த தீர்மானங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றிய தலைவர் நம்முடைய அறிஞர் அண்ணா அவர்கள்.
என்னப்பா.. இப்படி பொசுக்குன்னு....திண்டுக்கல் சூர்யா ரசிகர்கள் பெயரில் வலம் வரும் வம்பு போஸ்டர்
ஆபத்தை தடுக்க கிளர்ந்தெழுவோம்
அறிஞர் அண்ணா அவர்களால், கொண்டுவரப்பட்ட அந்த தீர்மானங்களுக்கு தற்போது ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆபத்தை நொறுக்கும் வகையில் நாம் கிளர்ந்து எழுந்திட வேண்டும் என்ற உறுதியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, அவரது பிறந்தநாளில் அனைவரையும் கேட்டு என்னுடைய துணைக் கேள்வியைத் தொடுக்க விரும்புகிறேன்.
நீட் தேர்வு ரத்து
அரியலூர் அனிதா முதல், இன்று திருச்செங்கோடு மோதிலால் வரை, பல மாணவ மாணவிகள் "நீட்" தேர்வுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள். "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைவருமே தொடர்ந்து மத்திய அரசை வற்புறுத்தி வருகிறோம்.
தமிழகத்திற்கு விதி விலக்கு
இதே பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக - மாணவச் செல்வங்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்கக் கோரி இந்த அவையில் இரு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் அனுமதிக்கு அனுப்பி வைத்தோம்.
மூன்று மாணவர்கள் தற்கொலை
ஆனால் இந்த அவையின் உணர்வுகளை மத்திய அரசு கிஞ்சித்தும் மதிக்கவில்லை. அனுப்பிய மசோதாக்களுக்கும் இதுவரை ஒப்புதல் வாங்கிடவில்லை. செப்டம்பர் 12-ம் தேதி - அதாவது "நீட்" தேர்வுக்கு முதல் நாள் மட்டும் - ஒரே நாளில் மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, தர்மபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் என மூன்று மாணவ - மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
எண்ணிப்பார்க்க முடியாத அடக்குமுறை
"I am sorry. I am tired" என்று மதுரையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின்- ஆடியோ வாய்ஸ் ஒட்டுமொத்த தமிழக "மாணவர்களின் வாய்ஸ்" என்பதை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. இதற்கிடையில் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் எண்ணிப் பார்க்க முடியாத அடக்குமுறைகள், கெடுபிடிகள் நடந்திருக்கிறது.
மாணவிகள் மயங்கினர்
புதுமணத் தம்பதியின் தாலியைக் கழற்றி வைத்து விட்டுத் தேர்வு எழுதுங்கள் என்ற கொடுமை நெல்லையில் நடைபெற்றுள்ளது. பசிக் கொடுமையால் மாணவிகள் மயங்கி விழுந்துள்ளார்கள். அடிப்படை வசதிகள் இன்றி பெற்றோரும், தேர்வு எழுதப் போன மாணவர்களும் தவித்துள்ளார்கள்.
நீட் தேர்வு தேவையா
இந்தி வழிகாட்டுதல்கள் மதுரை தேர்வு மையங்களில் தலைதூக்கி தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழுக்குப் பதில் ஆங்கிலக் கேள்வித்தாள் கொடுத்து சில மையங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் இப்படியொரு கொடுமையான நீட் தேர்வு தேவையா?
கண்டனத்தீர்மானம்
ஆகவே தமிழகச் சட்டமன்றத்தையும் தமிழக மாணவர்களின் உணர்வுகளையும் மதிக்காத நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யாத மத்திய அரசை எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்ய அ.தி.மு.க. அரசு கேட்கவில்லை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் மாண்புமிகு பியூஸ் கோயல் அவர்களைக் கண்டித்தும் கண்டனத் தீர்மானம் நாம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை
பிளஸ்டூ மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவக் கல்வியில் சேர்க்கை நடைபெறுவதை அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் உறுதுணயாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.