நெல்லையில் திமுக தோற்றால்.. அத்தனை பேரின் பதவியும் பறிக்கப்படும்.. வார்னிங் கொடுத்த ஸ்டாலின்!
சென்னை: நெல்லையில் தோற்றால் பதவி பறிக்கப்படும் என்று திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை கொடுத்துள்ளார். நெல்லையில் கோஷ்டி பூசல் உச்சத்தில் இருக்கும் நிலையில், உடன்பிறப்பே வா சந்திப்பின் போது திமுகவினருக்கு ஸ்டாலின் இப்படியொரு வார்னிங்கை நேரடியாகவே கொடுத்திருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக தரப்பில் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. திமுக இம்முறை நேரடியாக மக்களை முதலில் சந்திக்காமல், திமுக நிர்வாகிகளை சந்தித்து வருகிறது. உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு தொகுதியாக திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

33 நாட்களில் 73 சட்டசபைத் தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் நேரடியாக ஆலோசனை நடத்தி முடித்திருக்கிறார். தேர்தல் வியூகம், தொகுதி நிலவரம், அரசு திட்டங்கள் எந்த அளவிற்கு மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளது, தொகுதியில் உள்ள பிரச்சனைகள், நிர்வாகிகளுக்கு இடையிலான மோதல் ஆகியவை குறித்து கேட்கப்பட்டு வருகிறது.
திமுகவுக்கு சிக்கலான தொகுதிகளை அறிந்து முதலில் ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் நெல்லை மற்றும் சங்கரன்கோவில் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நெல்லை சட்டசபைத் தொகுதி நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வார்னிங் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
நெல்லையில் தோற்றால் அத்தனை பேரின் பதவியும் பறிக்கப்படும் என்று திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை கொடுத்துள்ளார். நெல்லை தொகுதியை பொறுத்தவரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ-வாக இருக்கிறார். 2016ல் நெல்லை தொகுதியில் திமுக வென்ற நிலையில், கடந்த தேர்தலில் தோற்றது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் நெல்லை மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் இருந்து வருகிறது. ஏற்கனவே நெல்லையில் மேயர் மாற்றப்பட்டிருக்கிறார். இதனால் திமுகவினர் இடையிலான உட்கட்சி பூசலை ஒதுக்கிவிட்டு வைத்துவிட்டு, இம்முறை நெல்லையில் திமுக கட்டாயம் வெல்வதற்கான பணிகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு அந்த 2 தொகுதிகளையும் திமுக ஒதுக்கியது. ஒருவேளை இம்முறையும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை ஒதுக்கினாலும், நயினார் நாகேந்திரனை வீழ்த்த வேண்டும் என்பதில் திமுக குறியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications