எனக்கும் திருநெல்வேலிதான்.. நெல்லை கண்ணன் பேச்சு சரியில்லை.. வைகோ பொளேர்
Recommended Video
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து, பேச்சாளர் நெல்லை கண்ணன் கூறிய கருத்துக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: நானும் திருநெல்வேலி மாவட்டத்துக்காரன்தான். நெல்லை கண்ணன் பயன்படுத்திய வார்த்தை என்பது தவறான வார்த்தை கிடையாது. சோலியை, முடித்துவிடுங்கள் என்றால் அதற்கு அர்த்தம் வேறு. திருநெல்வேலி மொழியில் அதைப் பயன்படுத்தி உள்ளார். அவர் அந்த வார்த்தையை பயன்படுத்தி இருக்க கூடாது, அது தவறானது.
இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை காலத்தில் கூட இப்படியான சட்டங்கள் வேகமாக கொண்டுவரப்படவில்லை. இந்துத்துவா அஜென்டா, ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
வேலையில்லா திண்டாட்டம், மக்கள் கோபமும், பொருளாதார வீழ்ச்சியால் நடுத்தர மக்களுக்கு ஏகப்பட்ட பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அந்த பாதிப்புகளை திசை திருப்பும் விதத்தில் காஷ்மீர் பிரச்சினையை கையில் எடுத்தனர். காஷ்மீர் மாநிலத்தை ஒரு சிறைச்சாலை போல மாற்றி விட்டனர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து அவரவர் வீட்டு வாசலில் கோலமிட்டு எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள். ஆனால் இந்த அரசு காவல்துறையை எதற்குத்தான் பயன்படுத்துவது என்று இல்லாமல், அடக்குமுறைக்கு பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது. இதற்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுதான் சாமானியர்களுக்கு, மத்திய அரசின் புத்தாண்டு பரிசா? சீறும் எதிர்க்கட்சிகள்
இந்தியா என்றால் இந்து நாடு என்று வெளிப்படையாக சொல்கிறார்கள். ஜலசக்தி என்று நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் மாற்றி உள்ளனர். சமஸ்கிருதத்தையும், இந்தியையும் எல்லா இடங்களிலும் திணிப்பதற்கு வேலை நடந்து வருகிறது.
ரயில்வே துறையை தனியார் மயமாக்க மாட்டோம் என்று நண்பர் பியூஸ் கோயல் சொன்னார். ஆனால், 150 ரயில்கள் தனியாருக்கு ஏலம் விடப்படும் என்று நேற்று செய்தி வெளிவந்துள்ளது. இவர்கள் சொல்வதற்கும், செய்வதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. இவ்வாறு வைகோ தெரிவித்தார்.