சாமியார் காலில் விழுந்த ஓபி ரவீந்திரநாத் குமார்.. ஓட்டிய நெட்டிசன்கள்.. தேனியில் திமுகவுக்கு விளாசல்
சென்னை: "ஒரு எம்பி என்கிற மாண்பினை மறந்து இவர் ஏன் ஜக்கி காலில் விழணும்" என்று தேனி எம்பி ரவீந்திரநாத்துக்கு எதிரான சர்ச்சைகள் வெளிவந்தவாறே உள்ளன.. இதை வைத்து ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்தன.. இப்படி கிளப்பி விடுவது அநேகமாக திமுகவினராகத்தான் இருக்கும் என்று கணக்கு போட்ட ரவீந்திரநாத் தரப்போ, "பிரியாணி சாப்பிட்டா காசு தர்றது இல்லை.. பியூட்டி பார்லர்லயும் காசு தரல.." என்று திமுகவுக்கு எதிரான சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் மஹாசிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 26-ம் ஆண்டு மகாசிவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, அமைச்சர் எஸ்பி வேலுமணி, எம்.பி. ரவீந்திரநாத், நடிகை காஜல் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அதுவரை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.. நிகழ்ச்சியின் முடிவில் திடீரென துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் எம்பி ரவீந்திரநாத், ஜக்கி வாசுதேவின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். இந்த போட்டோ அடுத்த சில மணி நேரங்களிலேயே வெளியாகி பெரும் வைரலாகிவிட்டது. சர்ச்சையாகவும் மாறி விட்டது.
பாஜக எம்பியா?
இதற்கு காரணம், ரவீந்திரநாத் குமாரின் சமீபகால அணுகுமுறைதான்.. இவர் நாடாளுமன்றத்தில் பேசும்போதும் சரி எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினாலும் சரி, கிட்டத்தட்ட ஒரு பாஜக "எம்பியாகவே" உருமாறி விடுகிறார் என்ற விமர்சனம் உள்ளது. முத்தலாக் மசோதாவை அதிமுகவே எதிர்த்தபோது, இவர் மட்டும் அந்த மசோதாவை மனசார வரவேற்று ஆதரித்து பேசினார். இது எடப்பாடி தரப்பை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், வேலூர் தேர்தலிலும் சரமாரியான தாக்கத்தையே அதிமுகவுக்கு ஏற்படுத்தியது.
காவிரி கூக்குரல்
பெரும்பாலும் ரவீந்திரநாத் மோடிக்கு ஆதரவாகவே பேசிவருகிறார்.. இது எல்லாம் போதாதென்று சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் காவிரி கூக்குரல் பேரணியில் இறங்கி தன் பங்கினை செய்தார்.. அதனால்தான் சமீபத்தில்கூட இவர் பாஜகவில் இணைந்துவிடுவாரோ என்ற கேள்விகூட வேகமாக எழுந்து அடங்கியது... ஆனாலும் தனது நிலைப்பாட்டை மாற்றவே இல்லை ரவீந்திரநாத் குமார்.
விமர்சனம்
தன் மீதான விமர்சனத்துக்கும், சர்ச்சைக்கும் ரவீந்திரநாத் எந்தவித மறுப்பும் ரியாக்ஷனும் காட்டவே இல்லை.. இந்த சமயத்தில்தான் ஜக்கியின் காலில் விழுந்து எழுந்துள்ளார்.. இதைதான் பலரும் விமர்சிக்க ஆரம்பித்தனர்.. ஏற்கனவே மத்திய அமைச்சர் பதவிக்காக தவமாய் தவமிருந்து வரும் வேளையில், ஒருவேளை ஜக்கியின் காலை பிடித்தால், அவரது ஆசையால் அமைச்சர் பதவி கிட்டிவிடும் என்று நினைக்கிறாரா என பலரும் சோஷியல் மீடியாவில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
காய் நகர்த்தல் ஏன்?
சத்குருவிடம் நட்பு பாராட்டினால், பாஜக மூலம் எளிதாக காய் நகர்த்தல் திட்டமாகவே அவரது காலில் விழும் சம்பவம் பார்க்கப்பட்டு வருகிறது! இப்படி தன்னை பற்றின சர்ச்சை எழுந்து வருவதால், ரவீந்திரநாத் தரப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.. அது திமுகவை சரமாரியாக விமர்சித்து ரவீந்திரநாத் முன்பு பேசிய வீடியோ.
சரமாரி விமர்சனம்
அதில், "பிரியாணி சாப்பிட்டா காசு தர்றது இல்லை.. பியூட்டி பார்லர்லயும் காசு தரல.. காசு கேட்டா அடிக்கிறாங்க, உதைக்கிறாங்க.. இப்பவே நடக்குது.. பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இருந்ததா? தினகரன் ஆபீசில் உயிரோடு கொளுத்தப்படலையா? வாக்கிங் போன முன்னாள் அமைச்சர் வெட்டி சாய்க்கப்படுகிறார்.. குண்டுவெடிப்பு, இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இருந்ததா இவங்க ஆட்சியில்?" என்று கேள்வி எழுப்புகிறார் ரவீந்திரநாத்.
பொதுவெளியில் இப்படியா?
இந்த வீடியோவை ஓபி ரவீந்திரநாத் குமார் ஆதரவாளர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.. என்றாலும் ஜக்கி காலில் விழுந்ததற்கு சரியான பதிலடி இது கிடையாது என்றுதான் சொல்ல தோன்றுகிறது... அதே சமயம்... ஆயிரமாயிரம் நம்பிக்கையுடன் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து எம்பியாக டெல்லிக்கு அனுப்பி வைத்த மக்கள்... இப்படி பொதுவெளியில் ஜக்கி காலில் விழுவதையும் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்!!