ஒரு பக்கம் வரவேற்பு.. மறுபக்கம்.. ஈழத்தைக் காட்டி.. ராகுலை வச்சு செய்த நெட்டிசன்கள்!
சென்னை : டுவிட்டர் அரசியல் டிரெண்டிங்கில் இன்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் முதலிடம். ராகுலுக்கு சரமாரியாக கேள்விகளை முன்வைத்து, வறுத்தெடுத்து வருகின்றனர்.
அரசியல் டிரெண்டிங்கிலும், இந்திய அளவிலான டிரெண்டிங்கிலும் ராகுல் தான் முதலிடம் பிடித்துள்ளார். ராகுல் தொடர்பான செய்திகள், மீம்கள், வீடியோக்களே அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
கோவை பிரசாரம் :
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைப்பதற்காக ராகுல் காந்தி இன்று கோவை வந்தார். திறந்த வேனில், சுட்டெரிக்கும் வெயிலில், மத்தியில் ஆளும் மோடி அரசை கடுமையாக தாக்கி பேசினார். அப்போது அவர், மோடி தமிழர்களையோ, தமிழ் மொழியையோ, கலாச்சாரத்தையோ மதிப்பதில்லை. தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுகிறார். மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற முயற்சியை எதிர்த்து நாம் போராட வேண்டி உள்ளது. தமிழர்களுக்கு சொந்தமான கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டும் என்றார்.
|
ராகுல் பதிவிட்ட வீடியோ :
கோவை வருவதற்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் பாடல் வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டிருந்தார். அதில் பண்பாடை பாதுகாப்போம். ஒரு கை பாப்போம் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோ இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஏராளமானோர் ரீட்வீட் செய்து வருகின்றனர்.
ராகுல் முதலிடம் :
அதுமட்டுமல்ல, கோவையில் ராகுல் பேசிய வீடியோ, அது தொடர்பான செய்திகளையும் ரீட்வீட் செய்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். கருத்துக்களை விட கேள்விகளே அதிகம் உள்ளன. GoBackRahul, Tamil என்ற ஹேஷ்டாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவைகள் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி உள்ளன. Tamil ஹேஷ்டாக் இதில் முதலிடத்தில் உள்ளது.
வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் :
தமிழ் கலாச்சாரம் எங்கு ஆபத்தான நிலையில் உள்ளது. மோடி அனைத்து மொழிகளிலும் கருத்து பதிவிடுகிறார். காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு, பாஜக ஆட்சியில் திரும்ப கொண்டு வரப்பட்டது. இலங்கையில் 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு உங்கள் குடும்பமும், கட்சியும் தான் காரணம். 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அமைதி காத்த நீங்கள் இப்போது தமிழ் மற்றும் தமிழர்கள் மீது அக்கறை காட்டி பேசுகிறீர்கள்.
மோடி அரசு தமிழுக்கு எதிராக என்ன செய்தது. ராகுல்தான் மீண்டும் மீண்டும் தமிழ் மற்றும் தமிழர்களை குறிவைக்கிறார். தமிழ் மக்களிடம் உங்கள் தந்தை ராஜீவ் காந்தி நடந்து கொண்டதை போல் நீங்கள் நடந்து கொள்கிறீர்கள் என்பது போன்ற பதிவுகள் அதிகம் பதிவிடப்பட்டு வருகின்றன.