வந்தார் மீண்டும் மோடி.. இனி ஹைட்ரோ கார்பன்.. நியூட்ரினோ.. 8 வழிச்சாலை... வேகம் எடுக்குமோ!
சென்னை: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் அமைத்துள்ளதால் ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டம், சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை இனி எந்த தடையும் இல்லாமல் தமிழகத்தில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களிலும், விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் சுமார் 42 இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு தேர்தல் முடிந்த உடன் அனுமதி அளித்துள்ளது.
இதில் இருந்தே மத்தியில் மீண்டும் தாங்கள் தான் ஆட்சிக்கு வரும் என பிரதமர் மோடி உறுதியாக நம்பி உள்ளார். எனவே நிச்சயம் காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஆய்வு எந்த தொய்வும் இல்லாமல் இனி நடக்கும்.
பாகிஸ்தானை உரசியதும், இந்துக்களை இழுத்ததும் மட்டும் இல்லைங்க.. பாஜக மாஸ் வெற்றிக்கு காரணம் வேற
சுற்றுச்சூழல் பிரச்னை
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் துணைமுதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த தொகுதியான போடி அருகே பொட்டிபுரம் மலையில் நடக்க உள்ளது. இந்த திட்டத்தை துவக்கிய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டுவந்தாலும், பாஜக அரசு செயல்படுத்த முயன்று வருகிறது. ஆனால் சுற்றுச்சூழல் அனுமதி பிரச்னை காரணமாக இத்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. இந்த திட்டமும் இப்போது நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது.
நிச்சயம் நிறைவேறும்
சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி சேலத்தில் நடந்த பிரச்சாரத்தில் தெரிவித்தார். முதல்வர் பழனிச்சாமியை வைத்துக்கொண்டுதான் அப்போதுஅவர் கூறினார். இப்போது தேர்தல் முடிந்து அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதால் நிச்சயம் சென்னை சேலம் இடையே 8வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது.
அதிமுக கடும் எதிர்ப்பு
இதில் நியூட்ரினோ திட்டத்திற்கு ஆளும் அதிமு அரசே எதிர்ப்பு தெரிவித்துவருவதடன், பக்கத்து மாநிலமான கேரளாவும் இதற்கு ஒப்புதல் தரவேண்டும் என்கிற உள்ளது. இதேபோல் 8வழிச்சாலை திட்டத்திற்கு பாஜக கூட்டணியில் உள்ள பாமக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஆய்வு மட்டுமே
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பொறுத்தவரை திமுக தலைவர் ஸ்டாலின் சோதனை மேற்கொள்ள கையெழுத்திட்டதைப் போல நாங்களும் சோதனை செயது வருகிறோம். மக்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் என்றார். ஆனால் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் பெட்ரோலுக்கு மாற்றான இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அவ்வளவு எளிதில் மத்திய அரசு கைவிடாது என்கிறார்கள். ஒருவேளை ஹைட்ரோ கார்பன் ஆய்வு வெற்றி பெற்றால் தங்க முட்டை இடும் வாத்து என்பதால் நிச்சயம் திட்டம் நிறுத்தப்பட வாய்ப்பே இல்லை.