அரசியல் தனிமரம்..விரக்தியின் வெளிப்பாடு..ஒருபோதும் இணைய வாய்ப்பில்லை..ஜெயக்குமார் பொளேர்
சென்னை: அரசியலில் தனிமரமாகிவிட்டார் ஓ.பன்னீர் செல்வம் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார். பிரிந்தது பிரிந்ததுதான் ஒருபோதும் இணைய வாய்ப்பே இல்லை என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஓ.பன்னீர் செல்வத்தின் பேட்டியில் விரக்தியின் வெளிப்பாடு தெரிவதாகவும் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் அன்பு மலர்களே என்று இரட்டை குழல் துப்பாக்கியாக வலம் வந்தனர். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட பிரச்சினையில் ஒ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து பிரிந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு போகவே ஆட்சியை காப்பாற்ற ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்தார் எடப்பாடி பழனிச்சாமி.
அப்போது ஏற்பட்ட உடன்பாட்டில், கட்சியை ஓ.பன்னீர் செல்வம் கவனித்துக்கொள்ள, ஆட்சியை கவனித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் ஒருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும் துணை ஒருங்கிணைப்பாராக எடப்பாடி பழனிச்சாமியும் செயல்பட்டனர். தேர்தல் நடைபெறும் போது சின்னம் கோரும் படிவத்திலும் வேட்பாளர் படிவத்திலும் ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து படிவங்களில் கையெழுத்து போடுவது வழக்கம்.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியாவிட்டாலும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு வெற்றி பெற்று சட்டசபை எதிர்கட்சி தலைவரானார் எடப்பாடி பழனிச்சாமி. சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவரானார் ஓ.பன்னீர் செல்வம்.
எல்லாமே சரியாக போய் கொண்டிருந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் அதிமுகவில் காட்சிகள் மாறின. ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாகவே பொதுக்குழுவில் சிக்கல் உருவானது. இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு மீண்டும் கூடியது. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர்.
இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாகவும், எடப்பாடி பழனிச்சாமி தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். மீண்டும் இணைந்து செயல்பட ஓ.பன்னீர் செல்வம் விருப்பம் தெரிவித்தாலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதற்கு தயாராக இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் கட்சியின் நலத்திற்காக எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச தயாராக இருப்பதாக கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்றும் ஒற்றுமையுடன் அனைவரும் இணைந்து செயல்பட விரும்புவதாகவே கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்த ஜெயக்குமார் அவரது அழைப்பை நிராகரித்து விட்டார்.
நாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் சொந்தமானது என்றும் ஜெயக்குமார் கூறினார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் தரப்பில் இருந்து எப்படி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் ஜெயக்குமார். ஓ.பன்னீர் செல்வம் அரசியலில் தனிமரமாகி விட்டார் என்று கூறியுள்ள ஜெயக்குமார், விரக்தியின் வெளிப்பாடு அவரது பேட்டியில் தெரிவதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைய வேண்டும் என்ற ஓ.பன்னீர் செல்வத்தின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்றும் கூறியுள்ளார் ஜெயக்குமார்.