அதிமுக உட்கட்சி விதிகளில் திருத்தம்.. சசிகலாவுக்கு செக் வைக்கும் திருத்தம்
சென்னை: அதிமுக உட்கட்சி விதிகளில் செயற்குழுவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், அதாவது பிரிந்திருந்த அதிமுக ஒன்றிணைந்த பிறகு நடந்த அதிமுக பொதுக் குழு தற்போது நடைபெறுகிறது. சென்னை வானகரத்தில் நடைபெறும் இந்த பொதுக் குழுக் கூட்டத்திற்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் செயற்குழு மற்றும் பொதுக் குழுவை சேர்ந்த 3000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
23 தீர்மானங்கள்
இலங்கையில் உள்ள தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கடி நாட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பது.
அரசுக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்வதை கண்டிப்பது
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும்
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தல்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டியதற்கு நன்றி தெரிவித்தல்
மாநில சுயாட்சி, இருமொழிக் கொள்கை என அண்ணா, எம்ஜிஆர் காட்டிய வழியில் பயணிப்போம்
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்ஸுக்கு பாராட்டுகள் தெரிவிப்பது
மறைந்த அதிமுக நிர்வாகிகளுக்கும் சாலை விபத்து, பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 231 பேருக்கு இரங்கல் தெரிவிப்பது
கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் தமிழர்களின் தொன்மையை உலகறிய செய்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது
தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்திற்கு பாராட்டுகள்
காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சி விதிகள்
மேலும் அதிமுக விதிகளிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் உட்கட்சி தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். அதுபோல் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கும் போட்டியிட 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். அதிமுகவில் 56 மாவட்டங்களாக பிரித்து கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு செக்
உட்கட்சி தேர்தலில் திருத்தம் செய்யப்பட்டது சசிகலாவுக்கு செக் வைத்ததாகவே பார்க்கப்படுகிறது. சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுகவுடன் இணைவார், தலைமையேற்று நடத்துவார் என்றெல்லாம் கூறப்படுகிறது.
திருத்தம்
அவர் தலைமை தாங்குவார் என்றால் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட வேண்டும். அந்த பதவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் சசிகலாவுக்காகவே நீக்கப்பட்டது. அந்த பதவிக்கான அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
பதவி
தற்போது உள்கட்சி தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டதால் சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் அவரால் அதிமுகவில் எந்த பதவியையும் வகிக்க முடியாது என்றே கூறப்படுகிறது.