அடடா.. 2022 –ல் மறுபடியும் பிறக்கப் போகுதாம் புதிய இந்தியா.. ஆனால் மக்கள் தாங்குவார்களா??
சென்னை: கடந்த 2014 –ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதுமே இதுவரை இல்லாத புதிய இந்தியா உருவாகப் போகிறது என்று அவ்வப்போது சத்தம் கேட்கும். ஒவ்வொரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் போதும் புதிய இந்தியா பிறந்து விட்டது என்று அறிவிப்பு வரும் ஆனால் அந்த புதிய இந்தியாவை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் இறந்தே போயுள்ளனர் என்பதுதான் எதார்த்தம்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது மக்களின் சிரமங்களை கிட்டத்தட்ட ஏளனம் செய்த பாஜகவினர் பின்வாசல் வழியாக எல்லையில் ராணுவ வீரர்கள் துன்பப்படும்போது, துயரப் படும்போது இந்த சின்ன சிரமத்தை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாதா என்ற கேள்வியை எழுப்பினர். தங்களிடம் இருந்த ஆயிரத்தையும் ரெண்டாயிரத்தையும் வங்கியில் மாற்ற முயன்று உயிரழந்தவர்கள் எத்தனையோ பேர். அவர்கள் அத்தனை பேரும் அந்த புதிய இந்தியாவை பொறுத்துக் கொள்ள முடியாமல் செத்துப் போனவர்கள்தான்.
ஜி எஸ் டி – நள்ளிரவு ஒன்றில் இது அறிமுகப்படுத்தப் பட்டது. அப்போது பிறந்த இந்தியாவில் எத்தனையோ சிறு மற்றும் குறு தொழில்கள் அழிந்து சின்னாபின்னமாகி போனது. அந்த தொழிலை மேற்கொண்ட தொழிலதிபர்கள் என்ன ஆனார்கள் என்பதும் அந்த தொழிற்சாலைகளில் வேலை பார்த்த தொழிலாளிகள் என்ன ஆனார்கள் என்பதுவும் நாடறிந்த சேதி சுவச் பாரத் என்ற பெயரில் அரசமரத்தடியில் வேப்பிலை குப்பைகளை அகற்றி நமது மாநிலத்தில் நமக்கு கண்கொள்ளா காட்சியை காட்டி வருகிறார்கள் பெரிய மனிதர்கள். இப்படி ஒரு புதிய இந்தியாவின் வெப்பத்தில் அனைவரும் தகித்து வருகிறோம்.
மோசமான நிலை
இந்த நிலையில், நேற்று வெளியான ஒரு செய்தி மற்றொரு புதிய இந்தியாவை கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு நமக்கு காண்பித்தது அதுதான் வேலை வாய்ப்பு இழப்பில் கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு நாம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளோம் என்று. இப்படி பல புதிய இந்தியாக்களின் பிறப்பால் மக்கள் தினம் தினம் ஒரு அவஸ்தையை சந்தித்து வரும் வேளையில் தேர்தலை மனதில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டும் பட்ஜெட்டிலும் 2022 - ம் ஆண்டில் மீண்டும் ஒரு புதிய இந்தியா பிறக்கும் என்று பொறுப்பு நிதியமைச்சர் கூறியுள்ளார்
இந்தியா உச்சத்தை அடையும்
சுத்தம், சுகாதாரம், உடல் நலம் போன்றவற்றில் இந்தியா உச்சத்தை அடையும் என்று கூறியுள்ளார் நிதியமைச்சர். 2022 ஐ அடைய இன்னும் மூன்றே மூன்று ஆண்டுகள்தான் உள்ளது. இந்தியாவின் மருத்துவ தலைநகர் எனப்படும் தமிழகத்திலேயே ஆள்வோரோ அதிகாரிகளோ அரசு மருத்துவமனைகளை சிகிச்சைக்காக எட்டிக் கூட பார்ப்பதில்லை. ஒரு முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எப்படி மரணமடைந்தார் என்ற மர்மம் கூட இன்னும் விலகாமல் உள்ளது. கடந்த வருடத்தின் இறுதியில்தான் எச் ஐ வி பாதித்த இரத்தத்தை பரிசோதிக்காமலேயே கர்ப்பிணி ஒருவருக்கு செலுத்தி சாதனை படைத்ததோடு, இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் சாதனை செய்ததற்காக விருதும் வாங்கிக் கொண்டோம்.
பிணத்தை கொண்டு செல்ல வாகனங்கள் இன்றி
இப்போதும் அரசு மருத்துவமனைகள் அமைச்சர் பெருமக்கள் வந்து சென்ற அடையாளத்தை சொல்லிக் கொண்டிருக்கின்றன அங்கு போடப்படும் ப்ளீச்சிங் பவுடர்கள். தமிழகத்திலேயே இந்த நிலை என்றால் மருத்துவத்தில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களின் நிலையை கூற வேண்டியதே இல்லை. பிணத்தை கொண்டு செல்லக் கூட வாகனங்கள் இன்றி தொழிலும் முதுகிலும் தூக்கி செல்லும் நிலையில்தான் இருக்கின்றோம். மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரத்தில் இருப்போரும் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு செல்லாதவரை எப்படி மருத்துவமனைகள் மேம்படும்?
13 எய்ம்ஸ் மருத்துவமனைகளின் நிலை என்ன
ஹரியானாவில் நாட்டின் 22-ஆவது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்கிறது பட்ஜெட். கடந்த நான்கரை ஆண்டுகளில் அடிக்கல் நாட்டப்பட்ட 13 எய்ம்ஸ்
மருத்துவமனைகளின் நிலை என்னவாயிற்று என்ற கேள்வியை இந்த இடத்தில் தவிர்க்க முடியவில்லை அதோடு கடந்த வாரம் மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சில பல ஆண்டுகளுக்கு முன்னரேயே முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அடிக்கல் நாட்டி விட்டதாக கூறியதற்கே இன்னும் விடை கிடைக்கவில்லை.
சான்றுக்கு எங்கே போவது
அடுத்து ஒரு மகா பென்சன் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளனர் பிரதான் மந்திரி சரம் யோகி மந்தன் எனப்படும் அந்த திட்டத்தின் மூலம் முறைசாரா தொழிலாளிகளுக்கு மாதம் ரூ.3000 வீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். இதற்கு ஒவ்வொரு தொழிலாளியும் இப்போது மாதம் ரூ. 100 வீதம் அளிக்கவேண்டும். அவருக்கு 60 வயதான பிறகு அவருக்கு மாதம் ரூ.3000 வீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். இதுதான் இந்த திட்டத்தின் அம்சம். இதன் மூலம் 10 கோடி தொழிலாளர்கள் பயன் அடைவார்கள் என்கிறது பட்ஜெட். எல்லாம் சரி முறை சாரா தொழிலாளர்களுக்கு அவர்களுக்கு இருப்பிடத்திற்கான சான்றுக்கு எங்கே போவது இன்ன பிற சான்றுகளுக்கு எப்படி பெறுவது? ஏற்கனவே ஆதாருக்கு அலைய விட்டதன் மூலம் பிறந்த இந்தியாவில் இந்தியர்கள் பட்ட அவஸ்தையை மறந்துவிடாத சூழலில் இப்படி ஒரு புதிய இந்தியா வரப்போகிறது.
அம்மணமாக ஓடிக் கொண்டிருக்கிறான்
அடுத்து விவசாயிகளின் வருமானம் இருமடங்காக இருக்கும் என்கிறது பட்ஜெட். இன்றளவும் விவசாயி, விளைச்சலும் இல்லாமல், அப்படியே பாடுபட்டு விளைவித்தாலும் விளைபொருளுக்கு விலை இல்லாமல், தலை நகர் டெல்லியில் அம்மணமாக ஓடிக் கொண்டிருக்கிறான். இன்னும் மூன்றே வருடங்களில் இந்த விவசாயிகள் அனைவரும் கோட்டு சூட்டு போட்டுகொண்டு இருமடங்கு வருமானத்தில் இருப்பார்கள் என்கிறது பட்ஜெட். இவையனைத்தையும் தாண்டி இவர்கள் கூறும் அனைவருக்கும் வீடு, கழிப்பறை மின் வசதி என்றெல்லாம் வந்தால் உண்மையில் இந்தியர்கள் ஏதோ ஒரு ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள்தான்.