மாநில சுயாட்சியை வலியுறுத்தி பூடகமாக ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்- சமூக வலைதளங்களில் பரபரப்பு!
Recommended Video
சென்னை: இந்தியாவில் மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் பூடகமாக பதிவிட்டிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பொதுநிகழ்ச்சிகளிலேயே அதிகம் பேசாதவர். ஆஸ்கர் விருது வழங்கும் போது தாய் மொழியாம் தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என பேசி அசர வைத்தார்.
பொதுவாக அரசியல் தளங்களில் எந்த கருத்தையும் கூறாமல் இருந்து வருபவர் ஏ.ஆர். ரஹ்மான். கடந்த சில நாட்களாக அவர் ட்விட்டரில் தாம் பேசுவதைப் போலவே குறியீடாக அரசியல் சார்ந்த கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்காக தமிழகம் கொந்தளித்தது. அதை ஆதரிக்கும் வகையில் பஞ்சாப்பில் தமிழ் வளர்கிறது என ட்வீட்டரில் பதிவிட்டிருந்தார் ரஹ்மான்.
இதனையடுத்து புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்ததாக அறிவித்தது. இதை வரவேற்கும் விதமாக 'அழகு' என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் திடீரென "AUTONOMOUS | meaning in the Cambridge English Dictionary https://dictionary.cambridge.org/dictionary/english/autonomous ..." என தம்முடைய ட்விட்டரில் பதிவிட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் ரஹ்மான். இந்தியாவில் மாநிலங்களுக்கு சுயாட்சி அதிகாரம் வேண்டும் என்கிற கருத்தை ரஹ்மான் முன்வைக்கிறாரா? என்கிற விவாதம் எழுந்துள்ளது.
AUTONOMOUS | meaning in the Cambridge English Dictionary https://t.co/DL8sYYJqgX
— A.R.Rahman (@arrahman) June 4, 2019
ரஹ்மானின் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. @Manivendh என்பவர், இவரேய பேச வச்சு டானுவா. அடய்களா என ஆதங்கப்பட்டிருக்கிறார். @VijayAnguraj என்பவர் இது உங்களது ட்வீட் தானா என எல்லோரையும் போல சந்தேகக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
@prabhatheaviat என்பவர் மத்திய அரசுக்கு ரஹ்மானின் தகவல் இது; உங்கள் துணிச்சலைப் பாராட்டுகிறோம் என கூறியுள்ளார். @itz_Terminator என்பவர் 'சுயாட்சி தமிழ்நாடு' என ரஹ்மானின் ட்விட்டர் பதிவுக்கு பொழிப்புரை எழுதியுள்ளார்.
யாருக்கு, என்ன சேதியைச் சொல்கிறார் இசைப்புயல்?#ஆஸ்கர்தமிழன்#குறியீடு https://t.co/qP0x1LDulS
— மு.குணசேகரன் (@GunasekaranMu) June 4, 2019
மூத்த பத்திரிகையாளர் குணசேகரன் @GunasekaranMu தமது ட்விட்டர் பக்கத்தில், யாருக்கு, என்ன சேதியைச் சொல்கிறார் இசைப்புயல்? #ஆஸ்கர்தமிழன் #குறியீடு என கேள்வி எழுப்பியிருக்கிறார். ரஹ்மானின் இந்த ட்விட்டர் அரசியல் தளத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தக் கூடும் என்றே தெரிகிறது.