வங்க கடலில் நாளை உருவாகிறது புரேவி புயல்- இலங்கையில் கரையை கடந்து புயலாகவே குமரி கடல் நோக்கி நகரும்!
சென்னை: வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை காலை புயலாக உருவாகிறது; இந்த புயல் இலங்கையில் கரையை கடந்த பின்னர் மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதிக்கு நகரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் வங்க கடலில் உருவான நிவர் புயல் கரையை கடந்தது. புதுச்சேரிக்கும் மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்த நிவர் புயல் சென்னைக்கு பெருமளவு மழையை கொடுத்தது.
அதேநேரத்தில் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியது. கரையை கடந்து வேலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக நகர்ந்து செல்லும் போதும் கனமழையை அள்ளிக் கொடுத்தது நிவர் புயல். இதனால் வடதமிழகத்தில் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
வங்க கடலில் இன்று உருவாகிறது புரேவி புயல்- தென் தமிழகத்தில் அதீத கனமழை எச்சரிக்கை
நாளை புயலாகிறது
இந்த நிலையில் வங்க கடலில் இலங்கைக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை காலை புயலாக உருமாறியது.
இலங்கையில் கரையை கடக்கிறது
இந்த புயலானது நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் கரையை கடக்கிறது. பின்னர் இலங்கையில் கரையை கடந்த நிலையில் புயலாகவே மன்னார் வளைகுடா வழியாக கன்னியாகுமரி கடல் பகுதிக்கு நகர்ந்து வரும்.
தென் தமிழகத்துக்கு மழை
கன்னியாகுமரி கடல் பகுதியில் இது புயலாகவே கரையை நோக்கி நகருமா? இல்லையா? என்பது பின்னரே தெரியவரும். இந்த புயலால் தென்தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளது. மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். ஆகையால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மேலும் தற்போதைய புதிய புயல் புரேவி என அழைக்கப்படுகிறது. இந்த புயலுக்கு புரேவி என மாலத்தீவு பெயரிட்டுள்ளது. புயல் உருவான பின்னரே புரேவி புயல் உருவாகி இருப்பதாக வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.