அடுத்த 12 மணி நேரத்தில் வங்கக் கடலில் உருவாகும் குலாப் புயல்! பாக். வைத்த பெயர்.. அர்த்தம் தெரியுமா?
சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை ஒடிஸா- ஆந்திரா இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.
நேற்றைய தினம் வங்கக் கடலின் வடகிழக்கு மற்றும் மத்திய கிழக்கு பகுதிகள் மற்றும் அந்தமான் கடலையொட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 65 கி.மீ. வரை வீசியது. இதையடுத்து இன்றைய தினம் ஒடிஸா கடலோரம், மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஆந்திராவின் கடலோரங்களில் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசும்.
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - கோவை,நீலகிரியில் இடி மின்னலுடன் கனமழை
அடுத்த 12 மணி நேரம்
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும். அவ்வாறு மாறும் புயல் நாளை மாலை அதாவது அடுத்த 48 மணி நேரத்தில் கரையை கடக்கும். இந்த புயல் ஒடிஸா- ஆந்திரா இடையே கலிங்கபட்டினத்தை சுற்றியுள்ள விசாகப்பட்டினம்- கோபால்பூர் பகுதியில் கரையை கடக்கிறது. கரையை கடக்கும் போது மணிக்கு 75 கி.மீ. வேகத்திற்கு மேல் காற்று வீசும்.
பாகிஸ்தான் வைத்த பெயர்
இந்த புயலுக்கு குலாப் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு பாகிஸ்தான் குலாப் என்ற பெயரை பரிந்துரைத்துள்ளது. குலாப் என்றால் இந்தியில் ரோஜா என அர்த்தமாகிறது. இந்த புயலும் பூப்போல மென்மையாக வீசுமா அல்லது ஆக்ரோஷமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மஞ்சள் எச்சரிக்கை
இந்த புயலால் நாளை ஒடிஸா பகுதியில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கந்தமால், கஞ்சம், ராயகாடா, கஜபதி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது போல் கட்டாக், ஜகத்சிங்பூர், பூரி, கோர்தா, கோராபட், மால்கன்கிரி ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கையும் பத்ராக், ஜெய்ப்பூர், பவுத், சோனேபூர், போலாங்கிர், நுவாபடா உள்ளிட்ட பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்கக் கடல், அந்தமான் கடலின் மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்குள்பட்ட இடங்களில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.