புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக்கொள்கையை தமிழகம் ஏற்காது... இருமொழிக்கொள்கைதான் - முதல்வர்
தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக்கொள்கைதான் நீடிக்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக்கொள்கைதான் நீடிக்கும் என்றும் மும்மொழிக்கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக்கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனை அளிப்பதாகவும் முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாகவும் மத்திய அரசுக்கு கருத்து தெரிவிப்பது குறித்து கல்வி அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்த கல்வி கொள்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
புதிய கல்விக் கொள்கை குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று சமீபத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக
முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் துறை செயலர்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தின் மொழி, கலாச்சாரம் பாதிக்காதவாறு எந்தெந்த அம்சங்களை புதிய கல்விக் கொள்கையில் ஏற்கலாம், என்னென்ன திருத்தங்களை கோரலாம் என்பன குறித்து விவாதிக்கப்பட்டன.
இந்த புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தெரிவித்துள்ளனர். திமுக பொதுச்செயலாளர் வைகோ, மாநில அரசுகள் புதிய கல்விக்கொள்கையை நிராகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
புதிய கல்விக்கொள்கையை தமிழகம் நிராகரிக்க வேண்டும் - முதல்வருக்கு எதிர்கட்சியினர் கடிதம்
புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர். புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் திமுக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித்தலைவர்கள் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக்கொள்கைதான் நீடிக்கும் என்றும் மும்மொழிக்கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக்கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனை அளிப்பதாகவும் முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மும்மொழிக்கொள்கையை பரிசீலனை செய்ய வேண்டும். அந்தந்த மாநில மக்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்த பிரதமர் அனுமதிக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.